/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் கொட்டித் தீர்த்த பிரச்னைகள் ஏராளம் தீர்வுக்கு வழி வகுத்தால் மட்டுமே விமோசனம்
/
விவசாயிகள் கொட்டித் தீர்த்த பிரச்னைகள் ஏராளம் தீர்வுக்கு வழி வகுத்தால் மட்டுமே விமோசனம்
விவசாயிகள் கொட்டித் தீர்த்த பிரச்னைகள் ஏராளம் தீர்வுக்கு வழி வகுத்தால் மட்டுமே விமோசனம்
விவசாயிகள் கொட்டித் தீர்த்த பிரச்னைகள் ஏராளம் தீர்வுக்கு வழி வகுத்தால் மட்டுமே விமோசனம்
ADDED : ஜன 31, 2026 04:37 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் பிரபு, வேளாண்துறை இணை இயக்குனர் முன்னிலை வகித்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ஷீலா பூசலட்சுமி வரவேற்றார். விவசாயிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
மானியத்தில் உரம் மவுனகுருசாமி, பா.ஜ. விவசாய அணி: உடுமலை உழவர் சந்தை அருகே ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. பூளவாடி, குடிமங்கலம் பகுதிகளில், மின் பணியாளர் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது; போதிய அளவு நியமிக்க வேண்டும். தென்னை சாகுபடிக்கான நுண்ணுாட்ட சத்து உரங்களை, மானியத்தில் வழங்க வேண்டும்.
மின் அலுவலகம் சரவணன், நுகர்வோர் நலச்சங்கம்: திருப்பூர் வடக்கு உழவர் சந்தை செல்லும் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சாமளாபுரம் மின் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை, மங்கலத்தில் இருந்து இடமாற்றம் செய்யக்கூடாது. மங்கலம் உதவி பொறியாளர் அலுவலகத்தை, அனுப்பர்பாளையத்தில் இருந்து பிரித்து, சாமளாபுரம் உபகோட்டத்துடன் இணைக்க வேண்டும்.
கூடுதல் தண்ணீர் வீரப்பன், செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: அமராவதி ஆயக்கட்டு பகுதியில், நார் தொழிற்சாலைகள் விதிமுறைகளை பின்பற்றாமல் இயங்கி வருகின்றன.
விவசாயிகளும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுவதால், கூட்டாய்வு நடத்தி, நார் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும். அரசு ஊழியர் ஒருவர், அரசு திட்டத்தில் கிணறு வெட்ட வாங்கிய, 5.50 லட்சம் ரூபாய் மானியத்தை, ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக விரைவில் திரும்பப்பெற வேண்டும். தாராபுரம் பகுதியில் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளது.
வரும், பிப். 10ம் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டுகளை போல், நெற்பயிர்களை பாதுகாக்க, கூடுதலாக, 10 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.
குறுகிய பாலம் கிருஷ்ணசாமி, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்கம்: நஞ்சராயன் குளத்தில் இருந்து செல்லும் வாய்க்காலில் இருந்து, விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் பெறுகின்றனர். பாலம் அமைக்க அனுமதி வாங்கிவிட்டு, குறுகலாக பாலம் அமைத்துள்ளதால், தண்ணீர் செல்வது தடைபடுகிறது. ரெடிமேடு பாலத்தை முறைப்படுத்த வேண்டும்.
உலர் களம் சின்னசாமி, மாவட்ட செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: ஊத்துக்குளி தாலுகா முத்தம்பாளையம், கடைப்புதுார் பகுதியில், விளை பொருட்களை உலர்த்த, உலர் களம் அமைக்க வேண்டும்.
மேட்டுப்புதுார் வழியாக செல்லும் ரோட்டைபுதுப்பிக்க வேண்டும். பள்ளபாளையம் குளம் வழியாக செல்லும் தார்ரோடு தண்ணீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், நிரந்தரமாக, ரோட்டை உயரமாக அமைத்து கொடுக்க வேண்டும். முத்தம்பாளையம் ஊராட்சி பகுதிகளில், 10 ஆண்டுகளுக்கு முன் அமைத்த ரோடுகளை புதுப்பிக்க வேண்டும்.
நெல் கொள்முதல் பழனிசாமி, தமிழக விவசாயிகள் சங்கம்: தாராபுரம் தாலுகா, அலங்கியம் கிராமத்தில், அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதி, கணக்கு சிட்டாவில், நன்செய் என்பதற்கு பதிலாக, புன்செய் என்று உள்ளது; அதை மாற்றிக்கொடுக்க வேண்டும். அமராவதி பாசன பகுதிகளில், நெல் அறுவடை துவங்கி விடும். எனவே, கடந்த ஆண்டை போலவே, அலங்கியம், தளவாய்பட்டினம், நஞ்சியம்பாளையம், சின்னபுத்துார், சின்னக்காம் பாளையம் பகுதிகளில் நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும்.
கறிக்கோழி பிரச்னை காளிமுத்து, தலைவர், தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்: தாராபுரம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தையும், சிறிய கடைகளையும், மார்க்கெட் பயன்பாட்டுக்காக விவசாயிகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும். தாராபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில்லை; தடையின்றி பயிர்க்கடன் வழங்க வேண்டும்.
பயிர்கடன் தள்ளுபடி செய்த போது, முன்கூட்டியே செலுத்திய விவசாயிகளுக்கு, தொகையை திருப்பி கொடுக்க வேண்டும். முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, கறிக்கோழி பண்ணை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; கோழி குஞ்சு வளர்க்க, கிலோவுக்கு, 20 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். தாராபுரம் உழவர் சந்தைக்கு அருகே உள்ள கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

