/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொலைதுாரத்துக்கும் 'தொங்கல்' பயணம்; உடுமலை பயணியர் பரிதவிப்பு
/
தொலைதுாரத்துக்கும் 'தொங்கல்' பயணம்; உடுமலை பயணியர் பரிதவிப்பு
தொலைதுாரத்துக்கும் 'தொங்கல்' பயணம்; உடுமலை பயணியர் பரிதவிப்பு
தொலைதுாரத்துக்கும் 'தொங்கல்' பயணம்; உடுமலை பயணியர் பரிதவிப்பு
ADDED : செப் 08, 2025 10:01 PM

உடுமலை: பழநி - கோவை வழித்தடத்தில் அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்படுவதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.
பழநி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக, கோவைக்கு அரசு பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுகிறது. இப்பகுதியிலிருந்து, கோவையிலுள்ள கல்லுாரிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர்.
மேலும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், மருத்துவமனைகள், கடைகளுக்கு என, தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவைக்கு சென்று வருகின்றனர்.
அதே போல், கோவையிலிருந்து, பழநி கோவில் மற்றும் திண்டுக்கல், மதுரை, திருச்சி என பெரு நகரங்களுக்கும் ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.
பழநி மற்றும் கோவை பகுதியிலிருந்து, இந்த வழித்தடத்தில் குறைந்தளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதிலும், விடுமுறை தினங்கள், விடுமுறை முடிந்து திரும்ப செல்பவர்கள் என பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு குறைந்தளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால், நெரிசல் அதிகளவு காணப்படுவதோடு, பஸ்களுக்காக காத்திருக்கும் நிலையும் உள்ளது.
அதே போல், உடுமலையிலிருந்து கோவை மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள் சென்று வரும் நிலையில், உடுமலையிலிருந்து, கோவை, பழநி உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு பஸ் இயக்கப்படுவதில்லை.
ஏற்கனவே, இயக்கப்பட்டு வந்த, 20க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால், உடுமலையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பயணியர், மற்ற பகுதிகளிலிருந்து வரும் அரசு பஸ்களை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளதால், பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
வரும் பஸ்கள் அனைத்திலும் பயணியர் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, உடுமலையிலிருந்து, பழநி, கோவை ஆகிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கவும், பழநி- கோவை வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலையிலிருந்து திருப்பூருக்கும் குறைந்தளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட தலைநகராக உள்ளதோடு, நுாற்பாலைகள், பனியன் கம்பெனிகளுக்கு ஏராளமான தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த வழித்தடத்திலும் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.