/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நகரில் குறுகலாக மாறிய முக்கிய ரோடுகள்; நிரந்தர நெரிசலால் மக்கள் திணறல்
/
நகரில் குறுகலாக மாறிய முக்கிய ரோடுகள்; நிரந்தர நெரிசலால் மக்கள் திணறல்
நகரில் குறுகலாக மாறிய முக்கிய ரோடுகள்; நிரந்தர நெரிசலால் மக்கள் திணறல்
நகரில் குறுகலாக மாறிய முக்கிய ரோடுகள்; நிரந்தர நெரிசலால் மக்கள் திணறல்
ADDED : டிச 19, 2024 11:35 PM
உடுமலை; உடுமலை நகரில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சிக்கு சொந்தமான ரோடுகளில், ஆக்கிரமிப்புகளால், ரோடுகள் அனைத்தும் குறுகலாக மாறி, போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் ராஜேந்திரா ரோடு, தளி ரோடு, கல்பனா ரோடு மற்றும் வ.உ.சி., வீதி ஆகிய ரோடுகளே, உடுமலை நகரின் பிரதான ரோடுகளாக உள்ளன.
திருமூர்த்திமலை, அமராவதி, மூணாறு உட்பட சுற்றுலா தலங்கள் மற்றும் நகரிலுள்ள அரசு அலுவலகங்களுக்கு, இந்த ரோடுகளின் வழியாகவே அனைத்து வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், நகரின் அனைத்து ரோடுகளிலும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன. அரசு அலுவலகங்கள் ஒருங்கிணைந்து ஒரே ரோட்டில் இருந்தாலும், தளி ரோடு நெரிசலுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை.
இதே போல், ரயில்வே ஸ்டேஷன், தினசரி சந்தை, உழவர் சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, அண்ணா பூங்கா அமைந்துள்ள ராஜேந்திரா ரோட்டிலும், காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து ஸ்தம்பிப்பது வழக்கமாகியுள்ளது.
பிற முக்கிய ரோடுகளான, கல்பனா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு, வ.உ.சி., வீதி போன்ற ரோடுகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
நகரின் அனைத்து ரோடுகளும், அவல நிலையில், உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதாசாரிகளின் நிலை பரிதாபமாகியுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி, நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நகராட்சி நிர்வாகம், போலீஸ், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
ஒருங்கிணைப்பு இல்லாததால், எந்த துறையும், நகர மக்களின் பிரச்னைகள் குறித்து கண்டுகொள்வதில்லை.
நெரிசலை குறைத்து போக்குவரத்தை சீராக்க மாவட்ட நிர்வாகம், அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உடுமலை மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இதே போல், தேசிய நெடுஞ்சாலையும், நகரப்பகுதியில், அதிகளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எல்லை கல் இருப்பதே தெரியாமல், தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்பு இருப்பதால், இந்த ரோட்டிலும், நெரிசல் நிரந்தரமாக உள்ளது.