ADDED : அக் 30, 2024 12:08 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில், மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.
பொங்கலுார், பல்லடம், குடிமங்கலம், உடுமலை, தாராபுரம் ஒன்றிய பகுதிகளில், அதிக அளவு பயிரிடப்படுகிறது. பல்லடம் ஒன்றியம் அனுப்பட்டியில், மக்காச்சோள சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில், மத்திய, மாநில அரசு மானிய உதவியுடன், மக்காச்சோள செயல் விளக்க திடல் அமைக்கப்படுகிறது; ஊடுபயிருடன், மக்காச்சோளம் சாகுபடி, ஒட்டுரக மக்காச்சோள விதை, நுண்ணுாட்டம், உயிர் உரங்கள், உயிரியல் பூச்சி மருந்துகள் வழங்கி, உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது.
பல்லடம் ஒன்றியம், அனுப்பட்டியில் நடந்த பயிற்சி முகாமில், விவசாயிகளுக்கு, மக்காச்சோள சாகுபடி குறித்து விரிவாக விளக்கப்பட்டது. தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசினர்.
ஒட்டுரக மக்காச்சோள விதைகள், கோடை உழவு, ஊட்டமேற்றிய தொழவுரம் தயாரித்து இடுதல், உரங்கள் இடுதல் நுண்ணுாட்டம் இடுதல், உயிரியல் காரணிகளை பயன்படுத்துதல்,ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஆகிய இனங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.

