/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவமழையை சாதகமாக்கும் முறைகேடு நிறுவனங்கள்
/
பருவமழையை சாதகமாக்கும் முறைகேடு நிறுவனங்கள்
ADDED : அக் 11, 2024 12:45 AM

திருப்பூர்: வடகிழக்கு பருவம் துவங்கியுள்ளதால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பருவமழை துவங்கி பெய்துவருகிறது. இதனால், திருப்பூரில் நேற்று, நொய்யலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இது, முறைகேடாக இயங்கும் சாய ஆலை, பிரின்டிங் நிறுவனத்தினருக்கு, பருவமழையால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததை சாதகமாக பயன்படுத்தி, சாயம், பிரின்டிங் கழிவுநீரை திறந்துவிட துவங்கி விட்டனர். ஆற்றில், குறைந்தளவு தண்ணீர் செல்லும்போது சாயத்தை விட்டால் பளிச்சென்று தெரிந்து விடும்; மிக சுலபமாக மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்ள நேரிடும். ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும்போது சாயத்தை திறந்துவிட்டால், சாயம் கலந்தது எளிதில் தெரியாது என்பதுதான் இதற்கு காரணம்.
இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. பூஜைக்கு தயாராகும் வகையில், கடந்த இரண்டு நாட்களாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில், சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுவந்தன. சில பிரின்டிங் நிறுவனங்கள், சுத்தம் செய்யும்போது வெளியேறும் சாயக்கழிவுநீரை, அருகாமையில் உள்ள சாக்கடை கால்வாயிலேயே திறந்து விடுகின்றன.
நேற்றுமுன்தினம் மந்திரி வாய்க்காலில் கலந்துவந்த பிரின்டிங் கழிவுநீர், நொய்யலாற்றில் கலந்தது. நேற்றும், மாலை நேரம், ஈஸ்வரன் கோவில் தரைப்பாலம் அருகே, ஆற்றில், பிரின்டிங் கழிவுநீர், ஆற்றுநீருடன் கலந்து பாய்ந்தோடியது.
---------
தனிப்படம்
---
தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இடம்: அணைமேடு தடுப்பணை.
---
திருப்பூர், ஈஸ்வரன் கோவில் பாலத்தின் கீழ் நொய்யல் ஆற்றில் ஆலை கழிவு நீர் ஓடியது.