/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்கலம் ரோடு விரிவாகிறது; நெரிசல் குறையும்
/
மங்கலம் ரோடு விரிவாகிறது; நெரிசல் குறையும்
ADDED : பிப் 25, 2024 11:33 PM
திருப்பூர்:திருப்பூர் - மங்கலம் ரோடு நான்கு வழிச்சாலை விரிவாக்கப்பணிக்கான ஆயத்தப்பணிகள் முடி வடைந்துள்ளன.
திருப்பூர், மங்கலம் ரோடு பகுதி மட்டும், அகலப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், நெடுஞ்சாலைத்துறை மூலம், பெரியாண்டிபாளையம் பகுதியில் மட்டும் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.
மாநகராட்சி அலுவலகம் துவங்கி, முதல் இரண்டு கி.மீ., வரை, மாநகராட்சி நிர்வாகம், ரோடுகளை பராமரிக்கிறது. பாரப்பாளையத்தில் இருந்து, பெரியாண்டிபாளையம் வரையில், ரோடு விரிவாக்க பணிக்கு அனுமதி கிடைத்ததால், அதற்கான ஆயத்த பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இருவழிச்சாலையாக உள்ள அப்பகுதியை, நான்கு வழிச்சாலையாக உயர்த்த, திட்டமதிப்பீடு தயாரித்து, டெண்டர் விடப்பட்டுள்ளது.
பாரப்பாளையம் முதல் ரோடு விரிவாக்கம் செய்யும் போது, சேனாபள்ளம் வரை, நான்கு வழிச்சாலையாக மாறிவிடும். இதன் மூலம் 'பீக்ஹவர்' போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
பொதுமக்கள் கூறுகையில், 'நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரோடு விரிவாக்கம் செய்யப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பெரியாண்டிபாளையம் பிரிவில் துவங்கி, கோழிப்பண்ணை, லிட்டில் பிளவர் கான்வென்ட், குளத்துப்புதுார், சின்னாண்டிபாளையம் பிரிவு வரையிலான ரோடுகளையும், விரைவாக புதுப்பிக்க முன்வர வேண்டும்,' என்றனர்.
மீண்டும் மரங்கள் வளர்க்க வேண்டும்
கடந்த 2000ம் ஆண்டில், ஆண்டிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், ரோட்டோரம் மரக்கன்று நட்டு வளர்க்கப்பட்டது; இன்று பசுமை கூடாரங்களாக இருக்கின்றன.
தற்போது, பாரப்பாளையம் துவங்கி பெரியாண்டிபாளையம் வரையுள்ள 51 மரங்களை வெட்டி அகற்றி, ரோடு விரிவாக்க பணி நடப்பது குறித்து, பசுமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை ரோடு விரிவாக்க பணி நிறைவு பெற்றதும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், மீண்டும் மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என்கின்றனர் பசுமை ஆர்வலர்கள்.

