/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'திரிசங்கு' நிலையில் மண்ணரை பாலம்: முடங்கிய கட்டுமானப் பணி: நில உரிமையாளர் எதிர்ப்பால் பரபரப்பு
/
'திரிசங்கு' நிலையில் மண்ணரை பாலம்: முடங்கிய கட்டுமானப் பணி: நில உரிமையாளர் எதிர்ப்பால் பரபரப்பு
'திரிசங்கு' நிலையில் மண்ணரை பாலம்: முடங்கிய கட்டுமானப் பணி: நில உரிமையாளர் எதிர்ப்பால் பரபரப்பு
'திரிசங்கு' நிலையில் மண்ணரை பாலம்: முடங்கிய கட்டுமானப் பணி: நில உரிமையாளர் எதிர்ப்பால் பரபரப்பு
ADDED : நவ 14, 2025 12:09 AM

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரையில், நீண்டகாலமாக முடங்கியுள்ள ரயில்வே உயர் மட்டப் பாலம் கட்டும் பணியை மீண்டும் துவங்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இப்பணிகளுக்கு நில உரிமையாளர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர், மண்ணரை பகுதியில் ரயில்வே பாதையை கடந்து செல்லும் வகையில் உயர்மட்டப்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதில், ரயில்பாதை அமைந்துள்ள இடத்தில் ரயில்வே துறை சார்பில் பாலம் கட்டப்பட்டு விட்டது. இப்பணி முடிந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பாலத்தின் இருபுறமும் அணுகு ரோடு அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத்துறையில் ஊரக ரோடுகள் பிரிவினர் மேற்கொள்ள வேண்டும்.
அவ்வகையில், இப்பாலம் திட்டமிடப்பட்டு இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், பல்வேறு தடைகள் ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி, விலைமதிப்பு நிர்ணயம், உரிமையாளர்களுடன் ஒப்பந்தம், கோர்ட் வழக்குகள் என இதன் நடவடிக்கைகள் நீண்டு கொண்டு சென்றது. இப்பிரச்னைகள் எல்லாம் தற்போது ஓரளவு நிறைவுக்கு வந்த நிலையில், பாலம் கட்டுமானப் பணியை துவங்க நெடுஞ்சாலைதுறையினர் திட்டமிட்டனர்.
இதற்கான ஆயத்தப் பணிகளை துவங்கும் வகையில், பாலம் அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் குழு பார்வையிடச் சென்றது. அங்கு சென்ற அதிகாரிகளை நில உரிமையாளர்கள் தரப்பில் சிலர் தடுத்து, வாக்குவாதம் செய்தனர். கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய விலை வழங்கவில்லை; பாலம் வரைபடம் உள்ளிட்ட தகவல் தரவேண்டும். முழுமையான நிலம் கையகப்படுத்தும் பணியை சட்டரீதியாக முடிக்காமல் பாலம் பணியை துவங்கக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் அங்கு நீண்ட நேரம் பரபரப்பு நிலவியது. உரிய விளக்கம் அளித்து பணியைத் துவங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

