ADDED : ஏப் 23, 2026 06:06 AM
'யுத்தி'யாக மாற்றிய புத்தி தேர்தல் ஆணையம் மேற்கொண்ட 'எஸ்.ஐ.ஆர்.' எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறை திருத்தப்பணி, ஜனநாயகக் கடமையை நிலைநாட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது பொதுவான பார்வை. ஆனால், பிரதான அரசியல் கட்சிகள் இதனைத் தங்களுக்குச் சாதகமான ஒரு 'தேர்தல் யுத்தியாக' மாற்றிக்கொண்டன என்பதுதான் கள யதார்த்தம்.
ரகசிய நோக்கம் பின்னணி சில மாதங்கள் முன், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் சரிபார்ப்புப் பணியை மேற்கொண்டனர். பொதுவாக இத்தகைய பணிகளில் மேலோட்டமான அக்கறையையே காட்டும் அரசியல் கட்சிகள், தற்போதைய அரசியல் சூழலில் ஒவ்வொரு ஓட்டும் வெற்றி--தோல்வியைத் தீர்மானிக்கும் காரணி என்பதை உணர்ந்துள்ளன.
அரசு அலுவலர்கள் ஒருபுறம் சரிபார்ப்புகளைச் செய்தாலும், அவர்களுக்கு இணையாக அரசியல் கட்சிகளின் கிளைச் செயலாளர்களும், வார்டு பிரதிநிதிகளும் நிழலாய் முகாமிட்டனர். அலுவலர்கள் சேகரிக்கும் தரவுகளுக்கு அப்பால், தங்கள் கட்சிக்கு 'சாதகமான' வாக்காளர்கள் யார் என்பதைத் துல்லியமாக அடையாளம் காண்பதே இவர்களின் ரகசிய நோக்கமாக இருந்தது.
பட்டியலுடன் திட்டமிடல்
தேர்தல் நேரங்களில் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக இருப்பது இடம்பெயர்ந்த வாக்காளர்கள்தான். பிழைப்புக்காகவோ, கல்விக்காகவோ வெளியூர் சென்றவர்களின் பட்டியலைத் தனியாக எடுத்து, தேர்தல் அன்று அவர்களைச் சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான திட்டமிடலை இந்தக் களப்பணியின் போதே கட்சிகள் வகுத்தன. அருகிலுள்ள ஊர்களுக்குக் குடிபெயர்ந்தவர்களின் விபரங்களைச் சேகரித்ததன் மூலம், கள்ள ஓட்டுகளைத் தவிர்க்கவும், சரியான முகவரியில் உண்மையான வாக்காளர்களைக் கண்டறியவும் இந்த நடைமுறை கட்சிகளுக்குப் பெரும் உதவியாக இருந்தது.
இளம் வாக்காளரைக் கவர...
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதில் அரசியல் கட்சிகள் காட்டிய வேகம் அபாரமானது. இவர்கள் எந்தக் கட்சியையும் சாராத 'மிதக்கும் ஓட்டுகள்' என்பதால், அவர்களை முதலில் அணுகி, 'படிவம் 6'-ஐப் பூர்த்தி செய்து கொடுத்ததன் வாயிலாக, இளம் வாக்காளர்களின் மனதில் இடம்பிடிக்கக் கட்சிகள் முற்பட்டன. புதிதாக ஒரு வார்டுக்குள் குடிபெயர்ந்தவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதன் மூலம் தங்களின் 'ஓட்டு வங்கியை' கட்சிகள் பலப்படுத்திக்கொண்டன.
டிஜிட்டல்மயம்... துல்லிய வியூகம்
முன்பெல்லாம் காகிதங்களில் குறிப்பெடுத்த அரசியல் கட்சிகள், இப்போது நவீன தொழில்நுட்பத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றன. வீடு வீடாகச் சென்றபோது சேகரிக்கப்பட்ட தகவல்களை உடனுக்குடன் செயலி வாயிலாகத் தலைமைக்கு அனுப்பி, தரவுகளைப் பகுப்பாய்வு செய்தனர்.
இதன் மூலம், 'யார் ஆதரவாளர்? யார் நடுநிலையாளர்? யார் மாற்றுக் கட்சி ஆதரவாளர்?' என்ற தெளிவான வகைப்படுத்துதல் சாத்தியமானது. இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தேர்தல் நிதி மற்றும் பரப்புரையை எங்கே அதிகப்படுத்த வேண்டும் என்ற பிரசார வியூகத்தைத் துல்லியமாக வகுத்தனர். அரசியல் கட்சிகளின் இத்தகைய நுணுக்கமான மெனக்கெடல்களின் பலன், இன்று பதிவாகும் வாக்கு சதவீதத்தின் வாயிலாகத் தெளிவாகத் தெரியும்.
