/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நால்ரோட்டில் நெரிசல் திணறும் வாகன ஓட்டுநர்கள்
/
நால்ரோட்டில் நெரிசல் திணறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : நவ 13, 2024 07:27 AM
உடுமலை, : மடத்துக்குளம் நால்ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சிறப்புத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கணியூர், கொமரலிங்கம் ரோடு சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு மடத்துக்குளத்தில் அமைந்துள்ளது.
இந்த சந்திப்பு பகுதியையொட்டி, மடத்துக்குளம் அரசு மருத்துவமனை மற்றும் வணிக நிறுவனங்கள் வரிசையாக அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில், கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் இதர வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.
இதனால், கணியூர் மற்றும் குமரலிங்கம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், சந்திப்பு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் இணையும் போது நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் திரும்பும் போது, தேசிய நெடுஞ்சாலையில், வரும் வாகனங்கள் மோதி, விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
மேலும், இருசக்கர வாகனங்கள் அப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை கடக்க சிரமப்பட வேண்டியுள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. தற்காலிக தீர்வாக, சந்திப்பு பகுதியில், டிவைடர் வைத்தும் எவ்வித பலனும் இல்லை.
நால்ரோடு பகுதியில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சந்திப்பு பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில், குறிப்பிட்ட துாரத்துக்கு, இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி, சென்டர் மீடியன் அமைக்கும் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டுநர்கள் திணறுவது தொடர்கதையாக உள்ளது.