/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய அலுவலர் பொறுப்பேற்பு: மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கை
/
புதிய அலுவலர் பொறுப்பேற்பு: மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கை
புதிய அலுவலர் பொறுப்பேற்பு: மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கை
புதிய அலுவலர் பொறுப்பேற்பு: மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கை
ADDED : ஜூலை 16, 2025 11:17 PM
திருப்பூர்; மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரம் உயர, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி சென்று சேர்வதை, புதிய மாவட்ட அலுவலர் உறுதி செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு, ஸ்கூட்டர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான பயனாளிக்கு ஆர்.சி.,புக் மட்டும் அனுப்பிவிட்டு, ஸ்கூட்டரை வேறு மாற்றுத்திறனாளிக்கு வழங்கியது, அரசு துறை சார்ந்த, தகுதியற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கியது போன்ற முறைகேடுகள் தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, சென்னையிலிருந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை சார்ந்த சிறப்பு அதிகாரிகள் குழுவினர், கடந்த ஜூன் மாதம் திருப்பூருக்கு வந்தனர். இரண்டு நாட்கள் முகாமிட்டு, இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்திச்சென்றனர். இதையடுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமாரை, ராணிப்பேட்டைக்கு இடம் மாறுதல் செய்தும்; ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமாரை, திருப்பூருக்கு இடம் மாறுதல் செய்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர் லட்சுமி, கடந்த 4ம் தேதி உத்தரவிட்டார்.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், புதிய அலுவலர் சரவணகுமார் நேற்று பொறுப்பேற்றார். மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், புதிய அலுவலரை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தனர்.
எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
மத்திய, மாநில அரசுகளின் உதவித்தொகை, உதவி உபகரணங்கள் அனைத்தையும், மாற்றுத்திறனாளிகளுக்கு பெற்றுத்தரவேண்டும். இலவச ஸ்கூட்டருக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு மூப்பு அடிப்படையில், நேர் காணல் நடத்தவேண்டும். நன்கு பரிசீலித்து, தகுதியானவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, உரிய காலத்தில் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் பெற்றுத்தரவேண்டும்.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடத்தப்படும் மருத்துவ முகாம்களில், மாற்றுத்திறனாளிகளை, காலை முதல் மாலை வரை, அதிக நேரம் காத்திருக்க வைக்காமல், அடையாள அட்டைகளை உடனடியாக வழங்கவேண்டும். கடந்த காலங்களில், ஸ்கூட்டர் வழங்கியதில் குளறுபடிக்கு காரணமான அலுவலர்கள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, கலெக்டர் அலுவலக நுழைவாயில் முதல், கூட்ட அரங்கம் வரை மீண்டும் பேட்டரி வாகனம் இயக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, கலெக்டர் தலைமையில் குறைகேட்பு கூட்டம் நடத்தி, பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, புதிய அலுவலரிடம் மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்த்துள்ளனர்.