/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிது புதிதாக முளைக்கும் பேனர்கள்
/
புதிது புதிதாக முளைக்கும் பேனர்கள்
ADDED : பிப் 07, 2026 05:24 AM

பல்லடம்: பல்லடம் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், விதிமுறை மீறி வைக்கப்படும் பேனர்கள், புதிது புதிதாக முளைத்து வருகின்றன.
அனுமதியின்றி வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள், கட்-அவுட்கள் மற்றும் கொடிகள் உள்ளிட்டவற்றால் கடந்த காலங்களில் எண்ணற்ற விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்க கோர்ட் கட்டுப்பாடு விதித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டுப்படுத்துகிறது. பாதுகாப்பு காரணங்கள் கருதி, தேசிய நெடுஞ்சாலைக்கு உட்பட்ட இடங்களில் விளம்பரப் பலகைகள், பேனர்கள் வைக்க கடும் கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலைத்துறை, போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் இணைந்து, விதிமுறை மீறி, அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்கள், விளம்பரப் பலகைகள் மீது நடவடிக்கை எடுக்கஅதிகாரம் உள்ளது.
ஆனால், வாகனப் போக்குவரத்து நிறைந்த பல்லடம் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில், ராட்சத விளம்பர பலகைகள், பேனர்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. புதிது புதிதாக முளைக்கும் விளம்பர பலகைகளால், இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இவற்றை அகற்ற எந்த அரசு துறை அதிகாரிகளும் தயாராக இல்லை.
அனுமதி இன்றி வைக்கப்படும் விதிமீறல் பேனர்கள், விளம்பர பலகைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

