ADDED : மார் 17, 2026 05:48 AM
திருப்பூர்: பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்தோ, மனிதர்களிடமிருந்தோ மற்றவர்களுக்கு, 'வெஸ்ட் நைல்' வைரஸ் பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால், கவனமுடன் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை எச்சரித்திருந்தது.
காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத்திணறல் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவர்களை நாடி, சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.
சென்னையை தொடர்ந்து, திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட, 14 மாவட்டங்களில் காகங்கள் உயிரிழந்தன. பறவைக்காய்ச்சலால், காகங்கள் உயிரிழந்தாலும், மற்ற பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்து வந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தியிடம் கேட்ட போது, 'திருப்பூர் மாவட்டத்தில் காகங்கள் இறப்பு இல்லை. பறவைக்காய்ச்சல் பாதிப்பும் இல்லை.
அதே நேரம், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உயிரிழந்து கிடக்கும் பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்த கூடாது. அறிகுறிகள் தொடர்ந்தால், அலட்சியம் காட்டாமல் உடனடியாக டாக்டரை சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்,' என்றார்.
