/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறை இல்லை; குற்றம் சொல்ல வழி இல்லை :வரைவு வாக்காளர் பட்டியல் 'நேர்த்தி'
/
குறை இல்லை; குற்றம் சொல்ல வழி இல்லை :வரைவு வாக்காளர் பட்டியல் 'நேர்த்தி'
குறை இல்லை; குற்றம் சொல்ல வழி இல்லை :வரைவு வாக்காளர் பட்டியல் 'நேர்த்தி'
குறை இல்லை; குற்றம் சொல்ல வழி இல்லை :வரைவு வாக்காளர் பட்டியல் 'நேர்த்தி'
ADDED : டிச 22, 2025 05:06 AM

திருப்பூர்: எஸ்.ஐ.ஆர். பணிகள் கச்சிதமாக முடிக்கப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியல் நேர்த்தியாக தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதனால், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மத்தியில், பெரிதாக புகார்கள் எழவில்லை.
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர். என்படும் தீவிர திருத்தம் முடிக்கப்பட்டு, கடந்த 19ல் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இறந்தோர், முகவரியில் இல்லாதோர், இரட்டை பதிவு வாக்காளர் என, 234 சட்டசபை தொகுதிகளில், மொத்தம் 97 லட்சத்து 38 ஆயிரம் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 24 லட்சத்து, 44 ஆயிரத்து 929 பேரின் பெயர்கள், பட்டியலில் இடம்பெற்றிருந்தன. தீவிர திருத்தத்தில், 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 9 லட்சத்து, 10 ஆயிரத்து 83 ஆண்; 9 லட்சத்து 70 ஆயிரத்து 817 பெண்; திருநங்கை 244 பேர் என, மொத்தம் 18 லட்சத்து 81 ஆயிரத்து 144 பேர், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
எதிர்ப்புக்குரல்கள்
எஸ்.ஐ.ஆர். வாயிலாக தகுதியான வாக்காளர் ஏராளமானோர் நீக்கப்படுவர்; கால அவகாசம் போதாது என்றெல்லாம், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு குரல்கள் எழுப்பினர்.
தீவிர திருத்தத்தில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் (பி.எல்.ஓ.,) மற்றும் ஓட்டுச்சாவடி முகவர்கள் (பி.எல்.ஏ.,) வாயிலாக, இறந்தவர்கள், இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் விவரங்கள் முழுமையான சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டே, பெயர் நீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்பார்த்தது நடந்தது
பல்லடம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய மூன்று தொகுதிகளிலும், வெளி மாவட்டங்களை சேர்ந்த இடம் பெயர்ந்த தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இவர்களில் பலர், சொந்த ஊர் ஓட்டுக்கு முக்கியத்துவம் அளித்து, திருப்பூரில் படிவம் பூர்த்தி செய்து கொடுக்கவில்லை. வெவ்வேறு காலகட்டங்களில், திருப்பூரிலிருந்து நிரந்தரமாக சொந்த ஊருக்கு சென்றவர்கள்; இறந்தும், வாக்காளர் பட்டியலில் வாழ்ந்துவந்தோர், இப்போது நீக்கப்பட்டுள்ளனர்.
இம்மூன்று தொகுதிகளிலும், அதிக எண்ணிக்கையிலான பெயர்கள் நீக்கப்படும் என்பது அனைவரும் எதிர்பார்த்ததுதான்; எஸ்.ஐ.ஆர். முடிவிலும் அதுவேதான் பிரதிபலித்திருக்கிறது. மாவட்டத்தின் எட்டு தொகுதிகளில் நீக்கப்பட்டுள்ளோரில், 55 சதவீதம் பேர், இம்மூன்று தொகுதிகளில் பட்டியலில் இருந்தவர்கள்.
செம்மையாக தயாரானது
கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து வழங்கிய, தகுதியான வாக்காளர்கள் விடுபடாமலும்; தகுதியற்றோர் பெயர்களை நீக்கம் செய்தும், செம்மையான முறையிலே வரைவு வாக்காளர் பட்டியல் தயாராகியிருப்பது தெரியவருகிறது. சில குளறுபடிகள் இருக்கலாமே தவிர, தகுதியானோர் அதிக எண்ணிக்கையில் நீக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என்பது தெளிவாகிறது.
மாயமானது எதிர்ப்புக்குரல்
வரைவு பட்டியல் வெளியானபின், அரசியல் கட்சியினர் மத்தியில் எவ்வித எதிர்ப்பு குரலும் எழவில்லை. தி.மு.க. - கம்யூ. கட்சியினரும்கூட, வரைவு பட்டியலை குறை சொல்லவில்லை.
ஆனாலும், தேர்தல் பிரிவிலிருந்து இப்போதுதான், பெயர் நீக்கப்பட்டோர் பட்டியல் அரசியல் கட்சியினருக்கு அனுப்பப்பட்டுவருகிறது. ஓட்டுச்சாவடி வாரியாக பட்டியலை ஆய்வு செய்து, அடுத்த ஓரிரு நாட்களில் கட்சியினர், வரைவு பட்டியல் தொடர்பான நிறை, குறைகளை தெரிவிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

