/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கவில்லை! கானல் நீராக மாறிய நான்கு வழிச்சாலை திட்டம்
/
பல்லடம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கவில்லை! கானல் நீராக மாறிய நான்கு வழிச்சாலை திட்டம்
பல்லடம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கவில்லை! கானல் நீராக மாறிய நான்கு வழிச்சாலை திட்டம்
பல்லடம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கவில்லை! கானல் நீராக மாறிய நான்கு வழிச்சாலை திட்டம்
ADDED : ஏப் 01, 2025 11:13 PM

உடுமலை; உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து, சந்திப்பு பகுதிகளை மேம்படுத்த, நெடுஞ்சாலைத்துறை கருத்துரு அனுப்பி, நான்கு ஆண்டுகளாகியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால், பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக உள்ளது.
உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலை, 48 கி.மீ., தொலைவுடையதாகும். நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் இந்த ரோடு பராமரிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து மிகுந்த இந்த நெடுஞ்சாலை, மிக குறுகலாக முன்பு இருந்தது.
கடந்த, 2009ல் குறுகலான ரோடு, இரு வழித்தடமாக விரிவுபடுத்தப்பட்டது; பெரியபட்டியில், உப்பாறு ஓடையின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது. அதன்பின்னர், எவ்வித மேம்பாட்டு பணியும் இந்த நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்படவில்லை.
உடுமலைபகுதி மக்களின் தொடர் கோரிக்கையையடுத்து, நெடுஞ்சாலையை நான்கு வழித்தடமாக மேம்படுத்தவும், முக்கிய சந்திப்பு பகுதிகளில் பாலம் கட்டுதல் உட்பட பணிகளை துவக்கவும் திட்டமிடப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோடு விரிவாக்கம் செய்ய கையகப்படுத்த வேண்டிய நிலங்கள், மின்கம்பங்கள் மாற்றியமைத்தல், கூடுதல் பாலங்கள் தேவைப்படும் இடங்கள் குறித்த திட்ட அறிக்கை, நான்கு ஆண்டுகளுக்கு முன் தயார் செய்யப்பட்டது.
அதில், 10 மீ., அகலமுள்ள ரோட்டை, 15.2., மீட்டருக்கு விரிவாக்கம் செய்து, மையத்தடுப்பு அமைத்து நான்கு வழிச்சாலையாக மாற்ற நிதி கோரப்பட்டது.
சந்திப்பு மேம்பாடு
உடுமலை -- பல்லடம், பொள்ளாச்சி - -தாராபுரம் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு குடிமங்கலத்தில் அமைந்துள்ளது. இந்த சந்திப்பு பகுதியில், சென்டர் மீடியன் அமைத்தும், போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த, வட்டார போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீஸ் உட்பட துறையினர் ஒருங்கிணைந்து ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் மேம்பாலம் அமைத்தல் உட்பட பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பில், மண் பரிசோதனை கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர், திட்ட பணிகளில், எவ்வித முன்னேற்றமும் இல்லை.
தொழில் வளர்ச்சி, நிர்வாக ரீதியான போக்குவரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையை, நான்கு வழித்தடமாக விரிவுபடுத்தி, விரைவு வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி, அரசுக்கு தொடர் கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.
அம்மனுவில், 'உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் செல்லும் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், பயண நேரம் அதிகரிக்கிறது.விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, மாவட்ட தலைநகரான திருப்பூருக்கு பல்லடம் வழியாக செல்லும் ரோட்டை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த, அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், சின்னவீரம்பட்டி, பொன்னேரி சந்திப்பு, சமத்துவபுரம் உள்ளிட்ட இடங்களில், ரோட்டில் அபாய வளைவு உள்ளது.
இந்த வளைவுகளில், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இந்த வளைவு பகுதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை.