ADDED : ஏப் 16, 2026 03:36 AM

திருப்பூர்: ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதல்கட்ட தபால் ஓட்டு பதிவு நேற்று நடைபெற்றது. தங்கள் சொந்த தொகுதியிலிருந்து அனுப்பப்பட்ட ஓட்டுச்சீட்டை பெற்று, ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.
திருப்பூரிலுள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில், 116 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். வரும் 23ம் தேதி, ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக, கடந்த 12 முதல் 14 ம் தேதி வரை, மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களிடம், வீடு தேடிச் சென்று, தபால் ஓட்டு பதிவு செய்து பெறப்பட்டது. படிவம் 12 டி பூர்த்தி செய்து வழங்கிய மொத்தம் 6,748 பேரில், 6,496 பேர், வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு பதிவு செய்தனர்.
எட்டு சட்டசபை தொகுதிகளிலுள்ள 2,822 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடுவதற்காக, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் 13 ஆயிரத்து 544 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 10,698 பேர், தபால் ஓட்டு பதிவு செய்வதற்காக, படிவம் 12டி வழங்கியுள்ளனர்.
அந்தந்த தொகுதிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, தபால் ஓட்டு பதிவு நடத்தப்பட்டது.
திருப்பூர் வடக்கு தொகுதியில், அங்கேரிபாளையம் கொங்கு மெட்ரிக் பள்ளி; தெற்கு தொகுதியில் ஜெய்வாபாய் பள்ளி; பல்லடத்தில் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரியிலும் பயற்சி மற்றும் தபால் ஓட்டு பதிவு நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளில் ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளன, வெவ்வேறு தொகுதிகளை சேர்ந்த அலுவலர்கள், தங்கள் சொந்த தொகுதியிலிருந்து அனுப்பப்பட்ட ஓட்டுச்சீட்டை பயன்படுத்தி, தபால் ஓட்டு பதிவு செய்தனர். ஓட்டுச்சீட்டில், தங்கள் அபிமான வேட்பாளரை தேர்வு செய்தனர். ஓட்டுச்சீட்டு மற்றும் உறுதி மொழி கடிதத்தை இணைத்து கவரில் வைத்து, ஓட்டு பெட்டிக்குள் போட்டனர்.
தாராபுரத்தில் 193 பேர்; காங்கயத்தில், 799 பேர்; திருப்பூர் வடக்கு தொகுதியில் 950 பேர்; உடுமலையில், 347 பேர் என, தபால் ஓட்டு பதிவு செய்தனர்.
மாலையில் பெட்டிகள் திறக்கப்பட்டு, ஓட்டுச்சீட்டுகள் தொகுதிவாரியாக சேர்க்கப்பட்டு, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன; அங்கிருந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகமான கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
வெளி மாவட்டங்களுக்கான ஓட்டுச்சீட்டுகள், தனியே அனுப்பிவைக்கப்பட உள்ளன. இன்று விடுபட்ட அலுவலர்கள், வரும் 19ம் தேதி தபால் ஓட்டு பதிவு செய்வர்.
