ADDED : மார் 19, 2026 10:30 PM
திருப்பூர்: திருப்பூர் வடக்கு தொகுதி, நிலை கண்காணிப்பு அலுவலர் செல்வகுமார் தலைமையிலான குழுவினரின் வாகன தணிக்கையில், ஈரோடு, எம்மாம்பூண்டியை சேர்ந்த சுந்தரம் என்பவர், ஆவணமின்றி எடுத்து வந்த, 55 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர், தெற்கு தொகுதி, நிலை கண்காணிப்பு அலுவலர் ஜெயசீலன் தலைமையிலான குழுவினர், பெருந்தொழுவில் வாகன தணிக்கையின் போது, அமராவதிபாளையம், ஞான சுப்ரமணி என்பவரிடம் இருந்து, 68 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதே குழுவினர், காரில் வந்த, முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்த, அருண்குமார் என்பவரிடம் 74,300 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
நிலை கண்காணிப்பு அலுவலர் தினேஷ் குமார் குழுவினர், காசிபாளையம் சோதனை சாவடியில் நடத்திய வாகன சோதனையில், டூவீலரில் வந்த நல்லுாரை சேர்ந்த கோகுல் என்பவரிடம் இருந்து, 50 ஆயிரத்து 120 ரூபாய் பறிமுதல் செய்தனர்.
* அவிநாசியில், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன் தலைமையில், எஸ்.எஸ்.ஐ., சுரேஷ்குமார் ஆகியோர் சிவானந்தன் என்பவரது காரில் சோதனை செய்தனர். அதில் ஆவணங்கள் ஏதுமின்றி இருந்த, 87 ஆயிரத்து 600 ரூபாயை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயராஜிடம் ஒப்படைத்தனர்.
