/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு... உழவு மானியம்!விதை, இடு பொருட்களும் வழங்கல்
/
வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு... உழவு மானியம்!விதை, இடு பொருட்களும் வழங்கல்
வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு... உழவு மானியம்!விதை, இடு பொருட்களும் வழங்கல்
வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு... உழவு மானியம்!விதை, இடு பொருட்களும் வழங்கல்
ADDED : மே 16, 2024 11:07 PM
உடுமலை:கோடை மழை துவங்கியுள்ள நிலையில், நிலங்களை பண்படுத்தி சாகுபடி துவக்க, விவசாயிகளுக்கு, உழவு மானியம் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், விதை, இடு பொருட்கள் மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோடை மழை துவங்கியுள்ள நிலையில், இதனை பயன்படுத்தி நிலங்களை உழவு செய்து பண்படுத்தி, சாகுபடி மேற்கொள்ளலாம். கோடை காலத்தில் நிலத்தின் மேல் மட்ட மண் அதிக வெப்பமடைகிறது.
இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்கு செல்லும் போது, நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும்.
எனவே, கோடை காலங்களில் பெய்யும் மழை நீரானது, மழை நீர் பூமிக்குள் செல்ல வழி ஏற்படுத்தி, நிலத்தில் சேமிக்க கோடை உழவு மிகவும் அவசியமானதாகும்.
கோடை உழவு செய்யும் போது, உண்டாகும் அதிக காற்றோட்டத்தினால், மண்ணிலுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய நஞ்சுகள் சிதைக்கப்படுகிறது.
மேலும், காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன் மழை நீருடன் சேர்ந்து மண்ணிற்குள் செல்வதால், மண்ணின் அங்ககச்சத்து அதிகரிக்கும்.
கோடை உழவு செய்யாத கெட்டியான நிலத்தில் விழும் மழை நீரானது, மண் அரிப்பை ஏற்படுத்தி வேகமாக நிலத்தில் உருண்டோடி, வீணாகிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் மண் கடினமானதாக இருக்கும்.
கோடை உழவு செய்யும் போது, மண் இறுக்கம் குறையும். மண்ணை புழுதிபட உழுவதால், மண் வளம் பெருகும்.
காற்றோட்டம் அதிகரித்து, நீர் ஊடுறுவி நிலத்திற்குள் செல்கிறது. நிலத்தை ஆழமாக உழுவதால், 15 செ.மீ., வரை மண்ணுக்குள் மழை நீர் செல்கிறது.
அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள அடித்தாள்கள், வேர்கள் ஆகியவை கோடை உழவின் போது, மடக்கு உழப்படுவதால், மண்ணின் சத்து அதிகரித்து, மண்ணிலுள்ள நன்மை செய்யும் உயிரினங்களின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது.
களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது; பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, பறவைகளுக்கு உணவாகிறது.
மேலும், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு மேற்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இதனால், நிலத்தடியிலுள்ள கூட்டுப்புழுக்கள் மற்றும் இதர பூச்சிகளின் முட்டைகள் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு, சூரிய வெப்பத்தின் காரணமாக அழிந்து விடும். மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு மிகவும் சிறந்தது.
இதனால், புழுக்கள், அத்துபூச்சிகள் மற்றும் மூன்றாம் கட்ட படைப்புழுக்கள் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு, பறவைகளுக்கு உணவாகிறது. இயற்கையான முறையில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த சிறந்த வழி, கோடை உழவாகும்.
விவசாயிகள், வரும் பருவ கால சாகுபடியில் அதிக மகசூல் பெற கோடை உழவு செய்ய வேண்டும்.
மானிய உதவிகள்
கோடை உழவுக்கு, வேளாண் துறை சார்பில், ஏக்கருக்கு, 500 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு, வேளாண் அலுவலர்களிடம் உழவு செய்வதை தெரியப்படுத்தி, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அதே போல், சோளம், கம்பு, நிலக்கடலை, பயறு வகை பயிர்கள், சிறுதானியங்கள் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு, 50 சதவீதம் விதை மானியம் வழங்கப்படுகிறது.
மேலும், சிறுதானிய இயக்கத்தின் கீழ், விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்டங்கள், ஜிப்சம் ஜிங்க் சல்பேட் என இடு பொருட்கள், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. கருப்பு மண் சார்ந்த பகுதிகயில், ஜிப்சம் இட்டு, மண் வளத்தை பெருக்கிக்கொள்ளலாம்.
முதல்வரின் 'மண் உயிர் காத்து மண் உயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், ஒரு கிராமத்தில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் பயிர் தேர்வு செய்யப்பட்டு, உழவு, விதை என விவசாயிகளுக்கு சாகுபடிக்கான உதவிகள் வழங்கப்பட்டு, செயல்விளக்க திடல்கள் அமைக்கப்படுகிறது.
பசுந்தாள் உரமான, தக்கைப்பூண்டு விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது. அதே போல், அடர் நடவு செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 200 கன்றுகள் வீதம், வேப்பங்கன்றுகளும் வழங்கப்படுகிறது.
எனவே, விவசாயிகள் உழவு மானியம், விதை, இடு பொருட்கள் மானியம் பெற அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம், என உடுமலை வேளாண் உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.

