/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணிக்கம்பட்டி... 'பசுமை' பட்டியாக மாறும்!
/
பணிக்கம்பட்டி... 'பசுமை' பட்டியாக மாறும்!
ADDED : ஜூலை 23, 2025 11:27 PM

திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், பல்லடம் அடுத்துள்ள பணிக்கம்பட்டியில், 1,362 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், ஆண்டுதோறும் இரண்டு லட்சம் மரக்கன்றுகள் வீதம் நட்டு வளர்க்கப்படுகிறது. சரியான தண்ணீர் மற்றும் பாதுகாப்பு வேலியுள்ள நிலங்களில், மரக்கன்று நட்டு கொடுக்கப்படுகிறது; நில உரிமையாளர், தண்ணீர் விட்டு பராமரித்து மரக்கன்றை வளர்த்து வருகின்றனர்.
கடந்த, 2015ல் துவங்கி, 10 திட்டங்கள் வாயிலாக, 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, வளர்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் பசுமைப்பயணம் துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவ மழையை பயன்படுத்தி, விவசாயிகள் மரக்கன்று நட்டு வளர்க்க ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில், பல்லடம் தாலுகா, பணிக்கம்பட்டி அடுத்துள்ள வேலப்பகவுண்டம்பாளையம் பண்ணைக்கிணத்து தோட்டத்தில் நேற்று மரக்கன்றுகள் நடப்பட்டது. ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டது. செம்மரம் - 402, சந்தனம் -320, வேங்கை -220, தேக்கு -198, மகாகனி - 133, ஈட்டி -85 என, 1,362 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.