/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நோயாளிகள் காத்திருக்க வேண்டாம்
/
நோயாளிகள் காத்திருக்க வேண்டாம்
ADDED : பிப் 12, 2026 05:02 AM

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நோயாளிகள் காத்திருந்து, சிரமப்படுவதை தவிர்க்க, மூன்றாக இருந்த வரிசை எண்ணிக்கை, ஆறாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
திருப்பூர், தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவுக்கு டாக்டர்களை சந்திக்க, மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற நாள் ஒன்றுக்கு, 1,500 - 2,250 பேர் வரை வருகின்றனர். காலை 7:30 முதல் 11:30 மணி வரை, நான்கு மணி நேரம் தொடர்ந்து பதிவு சீட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மூன்று கவுன்டர்களில் இருபாலருக்கு தலா ஒன்று, குழந்தைகள், முதியோருக்கென ஒதுக்கப்பட்டிருந்தது.
காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாவதுடன், பதிவு சீட்டு பெற்று டாக்டரை சந்திக்க செல்லவும், அடுத்த கட்ட பரிசோதனைக்கு பரிந்துரைக்கவும் தாமதம் ஏற்பட்டு வந்தது. நடைமுறை சிக்கல்களை களைய, பதிவு சீட்டு வழங்கும் கவுன்டர் எண்ணிக்கை, மூன்றில் இருந்து ஆறாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புறநோயாளிகள் பிரிவு ஆண்கள், தோல்நோய், குழந்தைகள், பெண்கள், நரம்பியல் மற்றும் மனநலப்பிரிவு, தொற்றாநோய், மாத மாத்திரை வழங்க, 60 வயதுக்கும் மேற்பட்டோர் பதிவு செய்ய என ஆறு கவுன்டர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் முகப்பில் அதற்கான அறிவிப்பு உள்ளது. அவரவர் அந்தந்த வரிசையில் நின்று பதிவு சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.
மருத்துவமனை டீன் மனோன்மணி கூறுகையில், ''வரும் நோயாளிகள் பதிவு சீட்டு பெற்று உடனுக்குடன் டாக்டரை சந்தித்தால், அடுத்தடுத்து வருவோர் காத்திருக்க வேண்டி இருக்காது. வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் அதிகளவில் மக்கள் வருகின்றனர். முதியவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருவோர் காத்திருப்பதை தவிர்க்க, ஆறு கவுன்டர்களில் பதிவு சீட்டு வழங்கப்படுகிறது. கணினிமயமாக்கல் என்பதால், 30 நொடிக்கு ஒரு டோக்கன் பெயர், விபரங்கள் பதிவு செய்து வழங்கப்படுகிறது,' என்றார்.
புறநோயாளிகளுக்காக 6 கவுன்டர்
ஆண்கள்
தோல்நோய் மற்றும் குழந்தைகள்
பெண்கள்
நரம்பியல் மற்றும் மனநலப்பிரிவு
தொற்றாநோய், மாத மாத்திரை
முதியோர்

