/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிமங்கலத்தில் ஊர்ப்புற நுாலகம் அமைக்க மக்்கள் எதிர்பார்ப்பு
/
குடிமங்கலத்தில் ஊர்ப்புற நுாலகம் அமைக்க மக்்கள் எதிர்பார்ப்பு
குடிமங்கலத்தில் ஊர்ப்புற நுாலகம் அமைக்க மக்்கள் எதிர்பார்ப்பு
குடிமங்கலத்தில் ஊர்ப்புற நுாலகம் அமைக்க மக்்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 15, 2026 06:54 AM
உடுமலை: குடிமங்கலம் ஒன்றியத்தில், ஊர்ப்புற நுாலகம் துவக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப் பட்டுள்ளது.
குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களிலுள்ள, அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு உட்பட காரணங்களால், ஆண்டுதோறும், படித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த ஒன்றியத்தில், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், பெதப்பம்பட்டி, பூளவாடி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும், கிளை நுாலகங்கள் செயல்பட்டு வருகின்றன. பெதப்பம்பட்டி கிளை நுாலகம் போதிய இடவசதியின்றி நெருக்கடியாக உள்ளது.
போட்டித்தேர்வுக்கான நுால்களை வைக்கவும், மாணவர்கள் தனியாக அமர்ந்து குறிப்பு எடுக்கவும் எவ்வித வசதியும் இல்லை. இந்த நுாலக கட்டடத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், திருப்பூர் மாவட்ட நுாலக ஆணைக்குழுவால் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
போதிய வசதியில்லாத இந்த நுாலகங்களுக்கும், ஒன்றியத்தின் கடைக்கோடியில் உள்ள வீதம்பட்டி, வாகத்தொழுவு, மூங்கில்தொழுவு, அனிக்கடவு, பெரியபட்டி உட்பட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, வந்து செல்வது மிகுந்த சிரமமானதாகும்.
எனவே, குறிப்பிட்ட கிராமங்களை ஒருங்கிணைத்து, ஊர்ப்புற நுாலகங்கள் துவக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கிராமங்களில், துவக்கப்பட்ட 'அண்ணா நுாலகமும்' மூடப்பட்டு, நுாலக கட்டடங்கள் பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளது.
போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இரண்டு பஸ் மாறி, உடுமலையிலுள்ள நுாலகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனர்.

