ADDED : நவ 18, 2024 06:37 AM

திருப்பூர் ; ஸ்ரீசண்முகாலயா இசை நாட்டியப்பள்ளி மாணவ, மாணவியரின் பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் ஸ்ருதிலய ஆராதனா சலங்கைபூஜை, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது.
ஸ்ரீசக்தி பீடம் சத்யா சிவாச்சாரியார், நாச்சியார் பாடசாலை இயக்குனர் சிவசரண்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நட்டுவனார் கார்த்திகை பிள்ளையிடம் பயின்ற, ஆதிரா மற்றும் சரயு ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்யப்பட்டது.
தேஷ்னா, தண்யாஸ்ரீ, கர்ணிகா, ஷன்விகா, அகர்ஷ்னா ஆகியோரின் சலங்கைபூஜை நடனம், பார்வையாளர்களை கவர்ந்தது. செட்டிபாளையத்தை சேர்ந்த, அஸ்வத்பூர்ணன் மற்றும் அனிருத் ஜெய் ஆகியே இரட்டை சகோதரர்களின் வாய்ப்பாட்டு அரங்கேற்றமும் நேற்று நடந்தது.
விருத்தம், கீதம், ஜதீஸ்வரம், ஸ்வர ஜதி, கிருதி, கீர்த்தனை, ஸ்லோகம், மங்களம் ஆகிய உருப்படிகளை, பல்வேறு ராக, தாளங்களுடன் பாடி அசத்தினர்.
நாட்டை ராகத்தில் பாடிய 'திருவாக்கும் செய் கர்மம்', மோகன ராகத்தில் பாடிய 'வரவீணா மருது பாணி...', 'பிலஹரி ராகத்தில் பாடிய 'ராரா வேணு கோபாலா...', கீரவாணி ராகத்தில் பாடிய 'தேவி நீயே துணை...' ஆகிய பாடல்கள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று, மெய்மறந்து ரசித்தனர்; இளம் கலைஞர்களை வாழ்த்தினர்.