/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடைபாதையில் நிரந்தர விளம்பர பலகை
/
நடைபாதையில் நிரந்தர விளம்பர பலகை
ADDED : பிப் 09, 2024 11:43 PM
உடுமலை;நகரின் பிரதான வீதிகளில், போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
உடுமலை நகருக்கு, பெரும் சவாலாக இருப்பது போக்குவரத்து நெரிசலாகும். காரணம், வீதிகளை ஆக்கிரமித்தவாறே, ஒவ்வொரு கடைகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல், பாதசாரிகள், பாதுகாப்புடன் நடந்து செல்வதற்கு ஏதுவாக நடைபாதை அமைக்கப்பட்டாலும், அங்கும் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.
வ.உ.சி., வீதி, ராஜேந்திரா ரோடு என முக்கிய வீதிகள் பல இடங்களில், நடைபாதைகள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நடைபாதையில், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு, நிரந்தர விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், அத்தியாவசிய தேவைக்காக, நகருக்கு வந்து செல்லும் மக்கள், ரோட்டில் நடந்து செல்வதாலும், அவ்வப்போது ரோட்டை கடக்க முயற்சிப்பதாலும், விபத்தில் சிக்குகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, கடைகளுக்கு முன், வைக்கப்படும் விளம்பர பலகைகள் பாதசாரிகளுக்கு இடையூறாகவும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் தடையாக வைக்கப்படுகிறது.
இதனால், முக்கிய வீதிகளில், வாகனங்கள் தாறுமாறாகவே நிறுத்தப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
மக்கள் கூறுகையில், 'ஆரம்ப கட்டத்திலேயே நடைபாதை ஆக்கிரமிப்பை கண்டறிந்து மீட்க வேண்டும். ஆனால், துறை ரீதியான அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, இத்தகைய விதிமீறல் தொடர்கிறது. இது குறித்து, நகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும் நடவடிக்கை கிடையாது. மக்கள் நலன் கருதி, துறை அதிகாரிகள் செயல்பட வேண்டும்,' என்றனர்.