/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கிடங்காக மாற்றப்படும் ஓடை: மாவட்ட நிர்வாகத்துக்கு மனு
/
குப்பை கிடங்காக மாற்றப்படும் ஓடை: மாவட்ட நிர்வாகத்துக்கு மனு
குப்பை கிடங்காக மாற்றப்படும் ஓடை: மாவட்ட நிர்வாகத்துக்கு மனு
குப்பை கிடங்காக மாற்றப்படும் ஓடை: மாவட்ட நிர்வாகத்துக்கு மனு
ADDED : மார் 23, 2026 06:39 PM
உடுமலை: உடுமலை அருகே, உப்பாறு ஓடை தடுப்பணையில் கழிவுகளை கொட்டி குப்பைக்கிடங்காக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம் சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்டது பெதப்பம்பட்டி. இப்பகுதி வழியாக, பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த மழை நீர் ஓடைகள் ஒருங்கிணைந்து உப்பாறு ஓடையுடன் இணைகிறது.
இந்த ஓடையில், உடுமலை ரோடு மற்றும் தாராபுரம் ரோடு அருகே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. மழைக்காலத்தில் இந்த தடுப்பணைகளில் தேங்கும் தண்ணீரே, சுற்றுப்பகுதி விளைநிலங்களின் நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளது.
இதில், உடுமலை ரோட்டின் அருகில் அமைந்துள்ள தடுப்பணை அருகில், ஊராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் கழிவு முழுவதையும் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர்.
பல மாதங்களாக அகற்றப்படாத திடக்கழிவுகள் தடுப்பணை பகுதியிலும், ஓடையிலும் குவிந்து மழைக்காலத்தில், தண்ணீர் செல்வது தடைபடுகிறது. தண்ணீரும் மாசடைகிறது.
ஓடை குப்பைக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளதால், நீரோட்ட பரப்பும் சுருங்கியுள்ளது. முற்றிலுமாக ஓடை காணாமல் போகும் முன், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டியில், மக்கள் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவில்லை.
குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பை முழுவதும், உப்பாறு ஓடை பகுதியில் குவித்து வைப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி ஓடை மற்றும் தடுப்பணைகளை மீட்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

