/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நள்ளிரவு பணியில் குழாய் உடைந்தது
/
நள்ளிரவு பணியில் குழாய் உடைந்தது
ADDED : மார் 13, 2026 05:45 AM

அவிநாசி: அவிநாசி - சேவூர் பிரதான ரோட்டில் 8வது வார்டுக்குட்பட்ட முத்து செட்டிபாளையம் பிரிவு பகுதியில் பல மாதங்களுக்கு முன் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு ரோட்டில், கழிவுநீர் வழிந்தோடியது.
சிறு பாலத்தை அகலப்படுத்தி, கழிவுநீர் தேங்காதவாறு சாக்கடை கட்ட நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குழியை தோண்டினர்.
மூன்று மாதம் கடந்தும் பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது நிதியிலிருந்து சாக்கடை கால்வாய் சிறுபாலம் கட்டுமான பணிகள் 10ம் தேதி இரவு துவங்கி விடியவிடிய நடைபெற்றது. இப்பணியின் போது, குடிநீர் சப்ளைக்கு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
உடைப்பை சீரமைக்காமல், அவசரகதியில் கான்கிரீட் கலவை ஊற்றி கல்வெட்டுப் பணிகள் முடிக்கப்பட்டது. இந்நிலையில், தண்ணீர் சப்ளை செய்ய முடியாததால் கான்கிரீட்டை உடைத்து, நகராட்சி ஊழியர்கள் குழாய் உடைப்பை சீரமைத்தனர்.
அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், 'கல்வெர்ட் பணியினை பார்வையிட்ட நகராட்சி தலைவர், கவுன்சிலர் ஆகியோர், குடிநீர் குழாய் உள்ளது என பொறியாளரிடம் தெரிவித்தனர். ஆனால், அவர் அலட்சிய போக்குடன் அவசரகதியில் நடந்து கொண்டார்.
இதனால், மக்களின் வரிப்பணமான ஐந்து லட்சம் ரூபாயை, வீணடித்தது குறித்து துளியும் கவலைப்படாமல் பொறியாளர் நடந்து கொள்கிறார்,' என்றனர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு குறித்து, பொறியாளர் பாலச்சந்தரிடம் கேட்டபோது, ''இரவு பணியின் போது குடிநீர் குழாய் உடைந்தது தெரியாது. இது குறித்து யாரும் என்னிடம் சொல்லவில்லை.
குழாய்கள் உடைந்திருந்தால், தண்ணீர் சப்ளை செய்யும்போதுதான் தெரியும்,'' என்று பொறுப்பற்ற முறையில் பதில் கூறி சமாளித்தார்.

