/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
75 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
/
75 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்
ADDED : அக் 24, 2025 12:18 AM
திருப்பூர்: 'சொந்த ஊர் சென்றவர்கள் திருப்பூர் திரும்ப வசதியாக இன்று இரவு துவங்கி, 26ம் தேதி இரவு வரை, 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 16 முதல், 20ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முதல் இரு நாட்கள் கூட்டம் இல்லாத நிலையில், 18 மற்றும் 19ம் தேதிகளில் பயணிகள் எண்ணிக்கை சிறப்பு பஸ்களில் அதிகமானது. நான்கு நாட்களில், 1.76 லட்சம் பேர் அரசு பஸ்கள் மூலம் பயணித்ததாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த, 21ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால், போன வேகத்தில் பலரும் திருப்பூர் திரும்பவில்லை. மழை காரணமாக, 22ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று முதல் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டாலும், பின்னலாடை நிறுவனங்களின் இயக்கம் முழுமையாக துவங்கவில்லை.
சொந்த ஊர் சென்றவர்கள், இன்று இரவு துவங்கி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் திருப்பூர் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் நோக்கி வருவோரின் வசதிக்காக இன்று இரவு, 20 சிறப்பு பஸ்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 25 மற்றும், 30 சிறப்பு பஸ்கள் என மொத்தம், 75 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.போக்குவரத்து கழக அதிகாரிகள், 'வெள்ளி, சனி சிறப்பு பஸ் இயக்கினாலும், ஞாயிற்றுக்கிழமை தான் கூட்டம் அதிகமாக இருக்கும். கூட்டத்துக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை முடிவெடுக்கப்படும்,' என்றனர்.
சிறப்பு ரயில் அறிவிப்பு தீபாவளிக்கு சொந்த ஊர் சென்ற வடமாநிலத்தினர், ரயில் மூலம் தமிழகம் திரும்ப வசதியாக, 12 முன்பதிவில்லா பெட்டி உட்பட, 18 பெட்டிகளுடன், பரூணி (பீஹார்) - எர்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்:06184) இயக்கப்படுகிறது. வரும் 26ம் தேதி இரவு 9:00 மணிக்கு பரூணியில் புறப்படும் ரயில், 29ம் தேதி, காலை 8:00 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும். ஈரோட்டுக்கு, 29ம் தேதி நள்ளிரவு, 12:10க்கு வரும் ரயில், திருப்பூருக்கு, அதிகாலை, 1:00 மணிக்கு வரும்; போத்தனுாரை அதிகாலை, 3:12க்கு சிறப்பு ரயில் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

