ADDED : அக் 24, 2025 11:47 PM

உடுமலை: நெடுஞ்சாலைத்துறை சார்பில், குளத்து கரைகளில் பனைமர விதைகள் நடும் திட்டம் நேற்று உடுமலை பகுதியில் துவங்கியது; நேற்று ஏழு இடங்களில், விதைகள் நடவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் அழிந்து வரும் பனைமரங்களை பாதுகாக்கும் வகையில், 'பனை வளர்ப்போம்; நிலத்தடி நீர் சேகரிப்போம்', என்ற தலைப்பில், அரசு பனை மர விதைகள் நடவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
உடுமலை உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டோரத்தில் உள்ள குளங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதன் கரைகளில் பனை மர விதை நடவு செய்யும் திட்டம் நேற்று துவங்கியது.
நெடுஞ்சாலைத்துறை தாராபுரம் கோட்ட பொறியாளர் ராணி, இத்திட்டத்தை நஞ்சேகவுண்டன்புதுார் குளத்தில் பனை மர விதைகளை நட்டு, திட்டத்தை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, வீதம்பட்டி - பொம்மநாயக்கன்பட்டி ரோட்டில், விநாயகர் மற்றும் மாரியம்மன் குளங்கள்; மாவட்ட முக்கிய சாலையான உடுமலை - சின்னாறு ரோட்டில், செங்குளம்; குறிச்சிக்கோட்டை குளம், ஜல்லிபட்டி ஆலாங்குளம், பெரியவாளவாடி ரோட்டில் பெரியகுளத்திலும் நேற்று பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில், ரோட்டோர குளங்கள் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து குளத்து கரையிலும் பனைமர விதைகள் நடவு செய்யப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

