நகை திருட்டு; இருவர் கைது: ஊத்துக்குளி, வெள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 35. கடந்த பிப்., 12 ம் தேதி இவரது வீட்டு பூட்டை உடைத்து, 2.5 சவரன் நகை திருடு போனது. புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார் விசாரித்தனர். திருட்டில் ஈடுபட்ட, இருவரை திருப்பூர் எம்.எஸ்., நகரில் கைது செய்தனர். விசாரணையில், முருகானந்தபுரத்தை சேர்ந்த கார்த்திக், 23, பெரியகுளத்தை சேர்ந்த புவனேஸ்வரன், 24 என்பது தெரிந்தது. இருவரும், ஊத்துக்குளி மற்றும் தேனியில் பொதுப்பணித்துறை பணியாளரின், இரு வீடுகளில்கைவரிசை காட்டியது தெரிந்தது. இருவர் மீது, பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிந்தது. கைது செய்த போலீசார், நகை, பணம், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
ஆசிரியரிடம் நகை பறிப்பு: காங்கயம், சக்தி நகரை சேர்ந்தவர் வனிதா, 56. ஆரம்ப பள்ளி ஆசிரியர். நேற்று காலை காங்கயம் - திருப்பூர் ரோட்டில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பெருமாள்மலை அருகே சென்ற போது, பின்னால் டூவீலரில் வந்த, இருவர், 2 சவரன் நகையை பறித்து சென்றனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

