மனைவியை குத்திய கணவர் கைது
திருப்பூர், மங்கலம் ரோடு, குளத்துப்புதுாரை சேர்ந்தவர் கவிநேயன், 32. இவரது மனைவி பிரியதர்ஷினி, 28. காதலித்து திருமணம் செய்தவர். கணவருக்கு உள்ள மது குடிக்கும் பழக்கத்தால், குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது.
கடந்த, 28ம் தேதி மகளின் பள்ளி ஆண்டு விழாவுக்கு மனைவி சென்றிருந்தார். பள்ளிக்கு மதுபோதையில் சென்ற கவிநேயன், போதையில் நடனமாடினார். இதுதொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணவர், கத்தியால் மனைவியை குத்தினார். காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்ட்ரல் போலீசார் கவிநேயனை கைது செய்தனர்.
'பாரில்' தகராறு எட்டு பேர் கைது
திருப்பூர், சந்திராபுரத்தை சேர்ந்தவர் சபரி, 32; பனியன் தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன், செவந்தாம்பாளையத்தில் உள்ள தனியார் மது பாருக்கு சென்றனர். அங்கு ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர்பாக, சபரி தரப்புக்கும், சுரேந்திரன் என்பவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டது.
பாட்டிலால் தாக்கி, இரு தரப்பில் காயமடைந்தனர். புகாரின் பேரில், சுரேந்திரன், 23, பரமேஸ்வரன், 21, சூர்யா, 26, தனுஷ், 24 மற்றும் சபரி, 32, அர்ஜூன், 23, மணிமூர்த்தி, 32, ரஞ்சன், 32 என, எட்டு பேரை நல்லுார் போலீசார் கைது செய்தனர்.
வாய்க்காலில் மூழ்கி பலி
திருப்பூர், வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் சிவா, 20; பனியன் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நண்பருடன் குளிப்பதற்காக கே.ஆண்டிபாளையத்தில் உள்ள பி.ஏ.பி., வாய்க்காலுக்கு சென்றார். தெர்மாகோல் உதவியுடன் சிவா நீச்சல் அடித்து கொண்டிருந்தார். திடீரென அது விலகியதும் சிவா நீரில் மூழ்கி இறந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
'குட்கா' விற்ற முதியவர் கைது
வெள்ளகோவில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். நடேசன் நகரில் உள்ள மளிகை கடையில் குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பது தெரிந்தது. இதுதொடர்பாக அப்பாதுரை, 57 என்பவரை கைது செய்து, 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
வேலம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அதில், சந்தேகப்படும் விதமாக டூவீலரில் வந்த நபரிடம் விசாரித்தனர். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், 25 என்பது தெரிந்தது. சோதனையில் அவரிடமிருந்து, 1.2 கிலோ கஞ்சா இருந்தது. அவரை கைது செய்து கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
போதை மாத்திரை: வாலிபர் கைது
வீரபாண்டி அருகே கல்லாங்காட்டில் போலீசார் ரோந்து சென்றனர். மாநகராட்சி பொது கழிப்பிடம் பின்புறம் சந்தேகப்படும் வகையில் வாலிபர் நின்றிருந்தார். அவரை அழைத்து விசாரித்த போலீசார், சோதனை செய்தனர். அதில், போதைக்கு பயன்படுத்த வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்தது தெரிந்தது. முத்து, 20 என்ற அந்நபரை கைது செய்து, 10 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

