மனைவிக்கு வீடியோ கால்கணவர் தற்கொலை திருப்பூர், குளத்துப்பாளையம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் சுரேஷ், 30. கடந்த வாரம் இவரது தாய் மாயமானார். இதனால், மனமுடைந்து இருந்தார். வீட்டில் இருந்தவர்கள் தாயை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்து வந்தனர். கடந்த 9ம் தேதி இரவு வாட்ஸ்அப் வாயிலாக, மனைவிக்கு வீடியோ கால் செய்து, தற்கொலை செய்வதாக கூறி சுரேஷ் போனைதுண்டித்தார்.
மனைவி தனது குடும்ப உறுப்பினர்களுடன் விரைந்து சென்று பார்த்தார். வீட்டின் மீது ஏறி ஓட்டை பிரித்து பார்த்ததில், சுரேஷ் துாக்குமாட்டி இறந்து கிடந்தது தெரிந்தது. ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
ரேஷன் ஊழியர் மரணம் ஊத்துக்குளி, சுண்டாக்கம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார், 52; விருமாண்டம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, ரேஷன் கடை விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தின் சாவியை கொடுத்து விட்டு சேரில் அமர்ந்தவர், மயக்கமடைந்து விழுந்தார். உடனே, அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் அவர் இறந்தது தெரிந்தது. ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கால்வாயில் பெண் சடலம் குண்டடம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பெரிய குமாரபாளையம் - பெல்லம்பட்டி செல்லும் பி.ஏ.பி., வாய்க்காலில் பெண் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், அடையாளம் தெரியாமல் மிதந்து வந்த, 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தாராபுரத்துக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனில் கஞ்சா மீட்பு திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மாநகர மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாநிலத்தில் இருந்து வந்த ரயில்களில் வந்த வடமாநில பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது, முதல் பிளாட்பார்மில், கேட்பாரற்று பேக் ஒன்று கிடந்தது. சோதனையில், ஏழு கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிந்தது. மதுவிலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.