துாக்கில் வாலிபர் தற்கொலை
வேலுார் மாவட்டம், வாலிபட்டியை சேர்ந்தவர் பிரசாந்த், 20. இவர் திருப்பூர் --- -- கொங்கு மெயின் ரோடு, எம்.எஸ். நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 3 நாட்களாக யாருடனும் பேசாமல் மனமுடைந்து இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பணிகளை முடித்து பனியன் நிறுவனத்தில் துாங்க சென்றார். நேற்று முன்தினம் பனியன் நிறுவன உரிமையாளர் வந்து வெகுநேரமாக கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது பிரசாந்த் துாக்கில் தொங்கி இறந்து கிடந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
திருடி சந்தையில் விற்ற மாடு மீட்பு
காங்கயம், நத்தக்காடையூரை சேர்ந்தவர் கண்ணன், 60; விவசாயம் செய்து, மாடுகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். 2 நாள் முன், வீட்டின் அருகே கட்டியிருந்த சிந்து மாடு மற்றும் கன்றுக்குட்டி திருடு போனது. புகாரின் பேரில், காங்கயம் போலீசார் விசாரித்து வந்தனர். திருடிய மாட்டை திருப்பூர் சந்தையில் விற்று சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக விசாரித்த போது, நத்தக்காடையூர், வெள்ளியம்பாளையத்தை சேர்ந்த யுவராஜ்குமார், 30 மற்றும் பாஸ்கர், 30 என தெரிந்தது. இருவரையும் கைது செய்து, விற்ற பணத்தை, உரியவரிடம் கொடுத்து மாடு மீட்கப்பட்டது.
பி.ஏ.பி.யில் விழுந்த தொழிலாளி பலி
காங்கயம், கணேஷ் நகரை சேர்ந்தவர் குப்புசாமி, 77; சலவை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகே கங்கா நகர் வழியே செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் துணிகளை துவைக்க சென்றார். எதிர்பாராத விதமாக கால்வாயில் தவறிவிழுந்து இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
கொடைக்கானல், அண்ணா நகரை சேர்ந்தவர் மோகன், 50. கடந்த, ஐந்து ஆண்டுகளாக காங்கயத்தில் தங்கி ரைஸ் மில்லில் வேலை செய்து வந்தார். இவரது, இரண்டாவது மகன் ராஜ்குமார், 21, கடந்த, இருமாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மது போதையில் தந்தையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு சண்டையிட்டார். பெற்றோர் பணம் தராததால், வீட்டுக்கு பின்புறம் இருந்த கிணற்றில் குதித்தார். அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

