வாலிபர் தற்கொலை திருப்பூர், அய்யம்பாளையம் ரோடு, கோவில் வழியை சேர்ந்தவர் சூர்யா, 34. கடன் பிரச்னை என்பதால், மனமுடைந்து காணப்பட்டார். கடந்த ஒரு மாதமாக சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில்,பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து இறந்தார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
தொழிலாளி தற்கொலை காங்கயம் அருகே கத்தாங்கண்ணியை சேர்ந்தவர் நாச்சிமுத்து, 56. மது அருந்தி விட்டு, அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மனைவியுடன் தகராறு செய்தார். இதனால், மனமுடைந்த அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்குமாட்டி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
பயங்கர ஆயுதங்களுடன் 'மாஜி' குற்றவாளி கைது பல்லடம் பஸ் ஸ்டாண்டில், போலீசார், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த நபர் ஒருவரிடம் விசாரிக்க முயன்ற போது, அவர் ஓட்டம் பிடித்தார். துரத்திச் சென்ற போலீசார், அவரை பிடித்து, கைப்பையை சோதனையிட்டனர். அதில், கொடுவாள் மற்றும் பட்டாகத்தி இருந்தது. போலீசார் அவரை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அந்நபர், மதுரை மாவட்டம், கீரைத்துறையை சேர்ந்த நாகராஜன் மகன் காளீஸ்வரன், 23 என்பதும், இவர் திருச்சுழி மற்றும் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில், கொலை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட, 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. சொந்த ஊரில் இருந்தால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி, பல்லடம் வந்ததாக கூறப்படுகிறது. போலீசார் காளீஸ்வரனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
டூ வீலர் மோதி முதியவர் பலி தெக்கலுார் அருகேயுள்ள ஒரு கம்பெனியில் பணியாற்றி வரும், மதுரையை சேர்ந்த வீரமணி 26, பாரதிராஜா, 32 மற்றும் யோவான், 21 ஆகிய மூவரும் டூவீலரை வேகமாக ஓட்டி சென்றனர். அதில், ஆலாம்பாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த ராயப்பன், 70, மீது டூவீலர் மோதியது. துாக்கி வீசப்பட்ட முதியவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார். வீரமணி மற்றும் பாரதிராஜாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு இருவரும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
5 கிலோ கஞ்சா சிக்கியது ஆட்டையாம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இரு வாலிபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்கள் ஒடிசா மாநிலம், காட்பாதி தாலுகா, சென்னாகாடி பகுதியை சேர்ந்த ஷாலு மாலிக் மகன் ஜோயல் மாலிக், 20, கீரானோ கீர் மகன் பிலியன் நீமா, 20; அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது ஒடிசாவில் இருந்துகஞ்சாவை கடத்தி பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த மதுவிலக்கு போலீசார், 5 கிலோகஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

