ஒரே நாளில் 4 கடைகளில் திருட்டு தாராபுரம், சகுனிபாளையத்தில் ரங்கநாதனின் மளிகை கடையில், பூட்டை உடைத்து, 13 ஆயிரம் ரூபாய், கணேசனின் இ-சேவை மையத்தில், 50 ஆயிரம் ரூபாய், லேப்டாப் மற்றும் பஜனை மட வீதியில் சிவதர்மராஜனின் மளிகை கடையில், 30 ஆயிரம் ரூபாய் மற்றும் சித்தி விநாயகர் கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த, 6 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் திருடி சென்றனர். டி.காளிபாளையத்தில் அடுத்தடுத்து, இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்தது.
ஒரே நாளில் அடுத்தடுத்து கடைகளில் நடந்த திருட்டு சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மண் கடத்திய லாரிகள் பறிமுதல் காங்கயம், ஊதியூர் பகுதியில், சட்ட விரோதமாக கற்கள், மண், மணல் கடத்துவதாக வந்த புகார் அடிப்படையில், சுரங்கத்துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையிலான அலுவலர்கள், வாகன சோதனை நடத்தினர். வீணம்பாளையம், காடையூர் ரோடு, காட்டுப்பாளையம் பகுதியில், அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி, ஊதியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய லாரி டிரைவர் மீது, வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
டூவீலர் மீது லாரி மோதி வாலிபர் பலி தாராபுரம், கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர், கோபிநாத், 30. இவர் தனது டூவீலரில், பொள்ளாச்சி - தாராபுரம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, சத்திரம் அருகே, தேங்காய் நார் ஏற்றி வந்த லாரி மீது மோதினார். தலையில் படுகாயமடைந்த கோபிநாத், அதே இடத்தில் இறந்தார். புகாரின் பேரில், தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கணவன் கண் முன் மனைவி பலி ஊத்துக்குளி, செட்டிபாளையம் ரோடு பகுதியில் வசிப்பவர், அருணாச்சலம், 76. தனது மனைவி விஜயலட்சுமியுடன், 68 ஸ்கூட்டரில் ஊத்துக்குளி சந்தைக்கு சென்றுள்ளார். ஊத்துக்குளி டவுன் மாரியம்மன் கோவில் அருகே வந்த போது, எதிரே வந்த லாரி, இவர்கள் மீது மோதியது.
இதில், விஜயலட்சுமியின் தலையில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில், ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

