ADDED : ஏப் 20, 2026 09:56 PM

திருப்பூர்:சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஓட்டுச்சாவடிகளில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் எல்லைக் கோடுகள் வரைந்து அடையாளப்படுத்தும் பணி தொடங்கியது.
தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுச்சாவடியிலிருந்து 200 மீட்டர் எல்லைக்குள் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் மற்றும் வேட்பாளர்களின் 'பூத் சிலிப்' மையங்கள் இந்த எல்லைக்கு அப்பாலேயே அமைய வேண்டும். வாக்காளர்களை இறக்கிவிட மட்டும் 100 மீட்டர் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படும் நிலையில், எல்லைக்குள் இருக்கும் அரசியல் சின்னங்கள் மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இன்று மாலை 6:00 மணியுடன் வேட்பாளர்களின் பிரசாரம் நிறைவடையும் நிலையில், நாளை மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடிகளுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளன. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைவரும் நாளையே அந்தந்த மையங்களுக்குச் சென்றடைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வரும் 23-ம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
----
