/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இளம் துளிர்களின் கரங்களில் துளிர்த்த பொங்கல் வாழ்த்து
/
இளம் துளிர்களின் கரங்களில் துளிர்த்த பொங்கல் வாழ்த்து
இளம் துளிர்களின் கரங்களில் துளிர்த்த பொங்கல் வாழ்த்து
இளம் துளிர்களின் கரங்களில் துளிர்த்த பொங்கல் வாழ்த்து
ADDED : ஜன 25, 2026 06:52 AM

'சா ர் போஸ்ட்... 'இந்த குரல் கேட்காதா?' என ஏக்கத்துடன் காத்திருந்த காலம் ஒன்றுண்டு. மணியார்டரையும், கடிதத்தையும் சுமந்து வரும் தபால்காரரின் கையில் தொங்கும் பையும், அவரை சுமந்து வரும் சைக்கிளும், தகவல் பரிமாற்றத்தின் அடையாளமாக திகழ்ந்தது.
தொலை துாரத்தில் வசிக்கும் தன் மகனின், மகளின், உறவுக்காரர்களின் நலம் விசாரிப்பை தாங்கிய, 'நலம்... நலமறிய ஆவல்' என கடிதத்தின் முதல் வரியில் பதிந்திருக்கும் வார்த்தைகள், பலரின் கண்களை நனைக்கும்; ஆனந்தத்தின் வெளிப்பாடாய்...
அதுவும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில், வாழ்த்து வாசகங்களை, பல வண்ண நிறங்களில் விதம், விதமான 'டிசைன்'களில் வீடு தேடி வரும் வாழ்த்து அட்டைகள், இன்றும் பலரது அலமாரியில், 'அந்த காலத்து ஆவணமாக' அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் பார்க்க முடியும்.
பிறந்த நாள், திருமண நாள் என, விசேஷ நாட்களிலும், இத்தகைய வாழ்த்து அட்டைகளை பரிமாறிக் கொள்வதில் அலாதி சந்தோஷமடைந்தனர் மக்கள். ஆனால், இ-மெயில், இன்டர்நெட், வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ட்ராகிராம் போன்ற அறிவியல் வழங்கிய தொழில்நுட்ப வசதி வந்த பிறகு, நலம் விசாரிப்பும், வாழ்த்து பரிமாற்றமும் 'டிஜிட்டல்' மயமாகிவிட்டது.
படித்ததும், மறைந்து போகும் திரையின் பிம்பம் தரும் மகிழ்ச்சியை விட, வாழ்த்து அட்டையில் பதிந்திருந்த மனதின் குரல், 'வேற லெவல்' என்றே சொல்ல வேண்டும்.அந்த அனுபவத்துக்குள் அழைத்து சென்றிருக்கின்றனர், அவிநாசி, சாலையப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள்.
கடந்த வாரம் நடந்து முடிந்த பொங்கல் விழாவையொட்டி, 4 முதல், 7ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள், தங்களின் விரலின் நளினத்தில், பல வண்ணங்களை கலந்து துாரிகை வரைந்து, அழகிய தமிழ் வார்த்தைகளால், பொங்கல் வாழ்த்துகளை பதித்து, கல்வித்துறை அமைச்சர் துவங்கி, கல்வி அலுவலர்கள், பள்ளியின் நலன் விரும்பிகள், தங்களின் முன்னாள், இன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என, பலருக்கும் அனுப்பினர்.
கையில் தவழ்ந்த வாழ்த்து அட்டையை வருடிய பலரின் உள்ளம் நெகிழ்ந்தது; பசுமை நினைவுகள் கண் முன் வந்து போனதால்... இதற்கு மாணவ, மாணவியரை ஊக்குவித்த ஆசிரியைசத்யபிரியா கூறியதாவது:
ஆண்டுதோறும், மாணவ, மாணவியர் இதுபோன்ற வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைக்கின்றனர். இம்முறை அவர்களின் பெற்றோேர கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்தனர்; இதில், பெருமகிழ்ச்சியடைந்தனர்; பெருமிதம் கொண்டனர். அன்பு பரிமாற்றத்தின் ஒரு அங்கமாக இருந்த வாழ்த்து அட்டை கலாசாரம் என்பது மறந்து போன ஒன்றாகிவிட்டது.
அதை நினைவுகூறும் வகையில் மாணவ, மாணவியின் கற்பனை திறனை ஊக்குவிக்கும் வகையிலும், இத்தகைய முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
பண்டிகை விடுமுறை நாட்களில் இதுபோன்ற பணியில் மாணவ, மாணவியர் கவனம் செலுத்துவதால், மொபைல்போன் பயன்படுத்தும் நேரம் அவர்களுக்கு குறைகிறது; இதனால், உடல், மனம் தெளிவு பெறுகின்றனர்.

