/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசைத்தறிகள் கணக்கெடுப்பு; விசைத்தறியாளர் வலியுறுத்தல்
/
விசைத்தறிகள் கணக்கெடுப்பு; விசைத்தறியாளர் வலியுறுத்தல்
விசைத்தறிகள் கணக்கெடுப்பு; விசைத்தறியாளர் வலியுறுத்தல்
விசைத்தறிகள் கணக்கெடுப்பு; விசைத்தறியாளர் வலியுறுத்தல்
ADDED : ஏப் 25, 2025 07:49 AM

பல்லடம்; ''விசைத்தறிகள் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்'' என, விசைத்தறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கைத்தறி மற்றும் துணி நுால் துறையின் கீழ் உள்ள விசைத்தறி தொழில், கூலி மற்றும் பாவுநுால் பிரச்னை காரணமாக நலிவடைந்துள்ளது. தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது விசைத்தறியாளர் எதிர்பார்ப்பு.
திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
தமிழகத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்பை அளிப்பதில் ஜவுளித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில், தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது.
மஹாராஷ்டிராவுக்கு அடுத்ததாக, தமிழகத்தில்தான் அதிகப்படியான விசைத்தறிகள் உள்ளன. குறிப்பாக, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தான் அதிக விசைத்தறிகள் உள்ளன. கடந்த காலத்தில், 2.5 லட்சம் விசைத்தறிகள் இருந்தன. தொழில் நலிவடைந்ததால், தற்போது, 2 லட்சமாக குறைந்துள்ளது. சங்கம் மூலம் எடுக்கப்பட்ட விவரம் என்பதால், இது, எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பது தெரியாது. தமிழக அரசு சார்பில், விசைத்தறிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்த ஓராண்டுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால், கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
தமிழகம் முழுவதும் முறையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கணக்கெடுப்பு நடத்தினால், அரசு மூலம் வழங்கப்படும் மானியங்கள், சலுகைகள், திட்டங்கள் உள்ளிட்டவை, விசைத்தறியாளர்களுக்கு முறையாக சென்று சேரும். அரசும் சரியாக திட்டமிடலுடன் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.