/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றிலும் பிரச்னைகள்... முற்றுப்புள்ளி எப்போது?
/
சுற்றிலும் பிரச்னைகள்... முற்றுப்புள்ளி எப்போது?
ADDED : ஜூன் 20, 2025 11:57 PM

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் திருப்பூரில் பல்வேறு பணிகள் நடந்துள்ளன; தற்போதும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. இருப்பினும், குடிநீர், சாலை, சாக்கடை உள்பட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் ஏக்கம் தொடர்கிறது. 'வாரம் ஒரு வார்டு' பகுதியில் இந்த வாரம், மாநகராட்சி முதல் வார்டு குறித்த கள ஆய்வு...
வார்டு பகுதிகள்எவை? எவை?
பொங்குபாளையம், எஸ்.பி.கே., நகர், டெக்மா நகர், பி.என்., ரோடு, செட்டிபாளையம், கணக்கம்பாளையத்தின் ஒரு பகுதி, கருப்பாங்காடு, குளத்துப்பாளையம் மெயின் ரோடு, குமரன் காலனி, பிரியங்கா நகர், எம்.எஸ்.எம்., நகர், கவுதம் கார்டன், பள்ளத்தோட்டம், பூலுவப்பட்டி ரிங்ரோடு.
வால்வு பழுதுதண்ணீர் விரயம்
வார்டு மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க, இந்திரா காலனியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி கட்டப்பட்டது. ஓராண்டுக்கு முன், கேட் வால்வு பழுதானது; இன்னமும் சரிசெய்யப்படவில்லை. தொடர்ந்து தண்ணீர் வீணாக வழிந்தோடி, சுற்றுச்சுவர் சேதமாகி இடியும் நிலைக்கு மாறி விட்டது. ''எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி சுவர் உள்ளது. பலமுறை மனு கொடுத்தும் தீர்வு இல்லை'' என்கின்றனர் குடியிருப்போர்.
வி.ஜி.வி., கார்டனில்வசிப்போர் தவிப்பு
வி.ஜி.வி., கார்டனில் ஆறுக்கும் மேற்பட்ட வீதிகளுக்கு இன்னமும் தார் சாலை வசதி இல்லை. ரோடு, மழைநீர் வடிகால் துவங்கப்படாததால், பாதாளச்சாக்கடை கால்வாய் எட்டாத பகுதியாக உள்ளது. திறந்த வெளியில் கழிவுநீர் தேங்குவதாலும், பல இடங்களில் முட்புதர் மண்டியிருப்பதாலும், கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லும் வீதிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மட்டுமே குப்பைத்தொட்டி உள்ளது. திறந்த வெளியில் ஆங்காங்கே குப்பைகளை வீசியெறிவது, அவற்றுக்கு தீ வைத்து எரிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
குறிப்பாக, தியாகி குமரன் காலனி மெயின் வீதியில், 100 மீ., துாரம் வழிநெடுக, குப்பைகள் நிறைந்துள்ளன. அவ்விடத்தை கடந்து செல்ல முடியாதபடி ஈக்கள் மெய்க்கின்றன.வார்டில் நெருக்கமான குடியிருப்புகளை விட காட்டுப்பகுதி நிறைந்திருப்பதால், பனியன் நிறுவன கழிவுகள் கொட்டி தீ வைக்கப்படுகிறது.
சறுக்கும் சாலைகள் மக்களுக்கு சங்கடம்
வார்டில் அதிக வாகனங்கள் பயணிக்கும் சாலையாக உள்ள. செட்டிபாளையம் - குமரன் காலனி, அண்ணா காலனி - பொங்குபாளையம் ரோடு, காளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை பணிகள் முழுமை பெறவில்லை. ஊராட்சியாக இருக்கும் போது போடப்பட்ட சாலை பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சறுக்கும் சாலையாகவும் மாறியுள்ளது. மெயின் வீதியில் மட்டுமே தெருவிளக்கு உள்ளது. சந்து, குறுக்கு வீதியில்இன்னமும் முழுமையாக மின்கம்பம் நடப்படவில்லை. இரவில் இருளில் தனியே பயத்துடன் தான் பெண்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
ஆபத்தான பாறைக்குழி தேவை பாதுகாப்பு
குப்பை கொட்ட மாநகராட்சி இடம் தேடி வரும் பொங்குபாளையம் பாறைக்குழி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. பாறைக்குழியை சுற்றிலும் சாலைகளில் வாகனங்கள் பயணிக்கின்றன. கம்பிவேலி, தடுப்பு எதுவும் இல்லை. ஏதேனும் விபத்து நேர்ந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழும் சூழல் உள்ளது. துளியும் பயம் அறியாமல் சிறுவர்கள் பாறைக்குழிக்குள் இறங்கி குளிக்கின்றனர். கண்காணிப்பு, பாதுகாப்பு எதுவுமில்லை.
மின் கம்பங்கள்மாற்றப்படுமா?
மின்கம்பங்களை சரிவர இடமாற்றாமல், வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க ஏதுவாக நட்டியுள்ளனர். மாநகராட்சி மூலம் பணி மேற்கொள்ளும் போது, சாலை பணி துவங்கும் போது மின்கம்பம் சாய்ந்து வீடுகளின் மேல் விழுந்து விடுவது போன்று சாய்ந்து நிற்கிறது. 20 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட மின்கம்பம் குமரன் காலனி ரோட்டில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து, எலும்பு கூடாக காட்சி தருகிறது. கம்பம் சாய்ந்து மின்விபத்து ஏற்படும் முன், கிடுகிடு மின்கம்பங்களை மாற்ற வேண்டும்.
வார்டு முழுக்க சுற்றிச்சுற்றிப் பிரச்னைகள் இருந்தபோதும் மாநகராட்சி நிர்வாகம் அதற்கு உடனடி முற்றுப்புள்ளி வைப்பது போல் தெரியவில்லை. இதுதான்இப்பகுதி மக்களின் ஆதங்கம்.
இயற்கையாகவே நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்திருப்பதுடன், வார்டு மக்கள் தொகை குறைவு, மேட்டுப்பாளையம் தண்ணீர் முதலில் வந்து சேர்வது இந்த வார்டுக்குதான் என்பதால், ஆறு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைத்து விடுகிறது. தொடர்ந்து நீராதாரத்தை பெருக்கும் வழிமுறைகளை சரிவர கையாளவில்லை. 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொங்குபாளையம் குட்டை கருவேல மரக்காடுகளாக காட்சியளிக்கின்றன.
குட்டைக்கு தண்ணீர் வரும் மழைநீர் வழித்தடம், ஷட்டர், நல்லாறுக்கு நீர் பயணிக்கும் கால்வாய் புதர்மண்டி காணப்படுகிறது.நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் மூலம், 2019ல் குடிமாரமத்து பணி நடந்தது. அதன்பின் எந்த பராமரிப்பும் இல்லை.
தொடர் மழை பெய்த நாட்களில் நான்கு அடி மழைநீர் ஓடிய சிற்றோடைகள் பல பொங்குபாளையம் - செட்டிபாளையம் வழித்தடத்தில் இருந்துள்ளது. தொடர் பராமரிப்பு இல்லாமல் இவை முழுதும் சுருங்கி, கி.மீ., கணக்கில் முட்புதர்களுடன் காட்சிதருகிறது.
மாநகராட்சி நில அளவை பிரிவினர் விரிவான அளவீடு செய்தால், ஆக்கிரமிக்கப்பட்ட நீர்வழித்தடங்களை மீட்டெடுக்க முடியும்.