/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம சபாவில் கருப்பு உடையணிந்து எதிர்ப்பு ; முதலிபாளையத்தில் பொதுமக்களால் பரபரப்பு
/
கிராம சபாவில் கருப்பு உடையணிந்து எதிர்ப்பு ; முதலிபாளையத்தில் பொதுமக்களால் பரபரப்பு
கிராம சபாவில் கருப்பு உடையணிந்து எதிர்ப்பு ; முதலிபாளையத்தில் பொதுமக்களால் பரபரப்பு
கிராம சபாவில் கருப்பு உடையணிந்து எதிர்ப்பு ; முதலிபாளையத்தில் பொதுமக்களால் பரபரப்பு
UPDATED : ஜன 27, 2026 10:07 AM
ADDED : ஜன 27, 2026 10:04 AM

திருப்பூர்: முதலிபாளையம் பாறைக்குழி பிரச்னைக்கு உரிய தீர்வை ஏற்படுத்தக்கோரி, மக்கள் நடத்திய போராட்டத்தால், நேற்றைய கிராம சபா கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
திருப்பூர் அருகே, முதலிபாளையம் ஊராட்சியில், புல எண். 393, நல்லுார் கிராமத்தில், புல எண். 354, 355, 356, 357 ஆகிய இடங்கள் குவாரியாக இருந்தது.
அவை, காலாவதியான நிலையில், திருப்பூர் மாநகராட்சி சார்பில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கு குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. அதோடு, அங்குள்ள தொழிற்சாலை கழிவுகளும் சேர்ந்து கொட்டப்பட்டதன் விளைவாக, அப்பகுதியில் மண், நீர் வளம் மாசடைந்தது.
மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர் மேற்கொண்ட ஆய்வில், டி.டி.எஸ். அளவு, 1.20 லட்சம் என, பதிவானது. அப்பகுதியில் விஷத்தன்மை நிறைந்த பல வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதும் உறுதியானது. எனவே, 'இப்பகுதியில் குப்பைக்கழிவு கொட்டப்படக் கூடாது' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் சார்பில், ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனால், 'அங்கு குப்பைக்கொட்ட தடை விதிக்கப்பட்டதுடன், பாறைக் குழியில் தேங்கியுள்ள கழிவுநீரை சுத்தி கரித்து வெளியேற்ற வேண்டும்' எனவும், ஐகோர்ட் வழிகாட்டியது. இதன் அடிப்படையில், இப்பகுதியை 'மாசுபட்ட பகுதியாக' அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைக்கின்றனர்.
'இக்கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்' என, முதலிபாளையம் கிராம ஊராட்சி சார்பில் நடத்தப்படும்கிராமசபா கூட்டங்களிலும் வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை நடந்த மூன்று கிராம சபை கூட்டங்களிலும், இக்கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், கிராம மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, கிராமசபா கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
நேற்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, செம்மாண்டம்பாளையத்தில், கிராம சபா கூட்டம் நடத்தப்பட்டது. மாசு பட்ட பகுதியாக அறிவிக்கும் கோரிக்கையை வலியுறுத்தி, கிராம மக்கள் கருப்பு உடையுடன் பங்கேற்றனர்.
இருப்பினும், கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்படாததால், கிராம மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, நேற்றைய கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
அறநிலையத் துறை அதிகாரி 'ஆப்சென்ட்' l கரைப்புதுாரில் கிராமசபா புறக்கணிப்பு
பல்லடம்: அறநிலையத்துறை அதிகாரி கூட்டத்துக்கு வராததால், கரைப்புதுார் கிராம மக்கள், 3வது முறையாக கிராம சபா கூட்டத்தை புறக்கணித்தனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சியில், 650 ஏக்கர் பரப்பளவிலான இனாம் நிலங்கள் அறநிலையத்துறையால் பூஜ்ஜிய மதிப்பு செய்யப்பட்டது.
இப்பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக, கடந்த இரண்டு முறை நடந்த கிராமசபா கூட்டங்களை, பொதுமக்கள் புறக்கணித்தனர். நேற்று,
குடியரசு தினத்தை முன்னிட்டு, அருள்புரம், உப்பிலிபாளையம் சமுதாய நலக்கூடத்தில், கிராமசபா கூட்டம் நடந்தது. காலை, 11.00 மணிக்கு கூட்டம் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆவணங்களுடன் அதிகாரிகளும், கோரிக்கை மனுக்களுடன் பொதுமக்களும் வந்திருந்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற இனாம் நில விவசாயிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் வராமல் கூட்டம் நடத்த வேண்டாம் என்றும், அவர் வரும் வரை காத்திருக்கிறோம் எனவும் திட்டவட்டமாக கூறினர்.
இதனால், ஒரு மணி நேரம் காத்திருந்த விவசாயிகள், பொதுமக்கள், அறநிலையத்துறை அதிகாரி வராததால், கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறிச் சென்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
அறநிலையத்துறை அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால், கரைப்புதுார் கிராமத்தில் உள்ள இனாம் நில விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆறு மாதமாக போராடியும்,மனுக்கள் கொடுத்தும் வருகிறோம்.
அறநிலையத்துறை நடவடிக்கையால் எங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.
பிரச்னையை உருவாக்கிய அறநிலையத்துறை அதிகாரிகளே இதற்கு தீர்வு ஏற்படுத்த தயாராக இல்லை. சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி இப்பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, இப்பிரச்னைக்காக, ஏற்கனவே இரண்டு முறை கிராமசபா கூட்டங்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், நேற்று, அறநிலையத்துறை அதிகாரி வராததை கண்டித்து, 3வது முறையாக புறக்கணிக்கப்பட்டது.

