ADDED : மார் 29, 2025 11:51 PM

அவிநாசி: அவிநாசி தாலுகா, குப்பண்டம்பாளையம் ஊராட்சி ஆதி திராவிடர் காலனியில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்ற கோரிக்கையை முன் வைத்து, அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.சி.க., மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி பேசுகையில், ''ஆதிதிராவிடர் காலனி மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் மயானத்திற்கு போதுமான ரோடு வசதி இல்லை. இதனால், மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.
அதேபோல கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லை. பல வீடுகள் சேதம் அடைந்து உள்ளது. அனைவருக்கும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அதனை தொடர்ந்து, பி.டி.ஓ., விஜயகுமாரிடம் (கிராம ஊராட்சி) பொதுமக்கள் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட பி.டி.ஓ., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
