PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM
திருப்பூர்:'ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகக்கூடாது' என்பது, தமிழக அரசின் அறைகூவல். 'இதற்கு, மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும்' என்ற அறிவுரை, ஒவ்வொரு முறை பருவமழை துவங்கும் முன்பும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுரையாக வழங்கப்படுகிறது.
வரும், 11ம் தேதி கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.இதுதொடர்பாக, கிராம ஊராட்சிகளுக்கு, ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலில், 'மழைநீர் சேமிப்பை முனைப்புடன் செயல்படுத்த, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். மழைநீர் சேகரிப்பை, மக்கள் இயக்கமாக முன்னெடுத்து செல்ல வேண்டும்.
வரும் பருவமழைக் காலத்தில், ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்கும் பொருட்டு, அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், திருமண மண்டபங்கள், பொதுக்கட்டடங்கள் என, அனைத்து கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பின், அதில் அடைப்புகள் ஏதுமின்றி, முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பான அறிவுறுத்தல், வழிகாட்டுதல் என்பது, பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறது. பெரும்பாலான அரசு கட்டடங்களில் கூட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லை. எனவே, இம்முறையாவது மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அறிவிப்பை, சரியான முறையில் அமல்படுத்த வேண்டும்.