/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நியாயமான கூலி உயர்வு; விசைத்தறியாளர் வலியுறுத்தல்
/
நியாயமான கூலி உயர்வு; விசைத்தறியாளர் வலியுறுத்தல்
ADDED : ஜன 24, 2024 01:32 AM

பல்லடம்;நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வலியுறுத்தி, விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் சார்பில், கூலி உயர்வை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலரிடம், சங்க தலைவர் குமாரசாமி தலைமையில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனு:
கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 90 சதவீத விசைத்தறிகள் கூலி அடிப்படையில் நடந்து வருகின்றன. மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால், விசைத்தறி தொழில் சார்ந்த அச்சுப் பிணைத்தல், இழை வாங்குதல், ஒர்க் ஷாப் கட்டணம், வேன் வாடகை உள்ளிட்ட அனைத்தும் பல மடங்கு உயர்ந்து விட்டன.
தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, தொழிலாளர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டிய உள்ளது. ஆனால், விசைத்தறியாளர்களுக்கு, சரியான கூலி உயர்வு கிடைத்து, 11 ஆண்டுகள் ஆகின்றன.
கடந்த, 2014ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த கூலியை நடைமுறைப் படுத்தாததால், 2017 வரை கூலி உயர்வை பெற முடியவில்லை.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வை பெற முடியாமல், பலர் தொழிலை விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
எனவே, 2022ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, சோமனுார் ரகத்துக்கு, 60 சதவீதம் மற்றும் இதர ரகங்களுக்கு, 50 சதவீதம் கூலி உயர்வு பெற்று தர வேண்டும்.
ஜவுளி உற்பத்தியாளர்கள், ஒப்பந்த கூலி உயர்வை குறைத்து வழங்காமல் இருக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

