/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மறுமணம் பதிவு செய்ய மறுப்பு; இணை ஆணையர் விளக்கம்
/
மறுமணம் பதிவு செய்ய மறுப்பு; இணை ஆணையர் விளக்கம்
ADDED : ஜன 22, 2025 12:11 AM
பல்லடம்; சட்ட ரீதியாக மறுமணத்தை பதிவு செய்ய நினைப்பவர்களுக்கு, ஹிந்து அறநிலையத்துறை முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கணவனை இழந்த இளம் பெண்கள், மனைவியை இழந்த ஆண்கள் அல்லது பிற காரணத்துக்காக சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றவர்கள் முறைப்படி மறுமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால், ஹிந்து அறநிலையத்துறை கோவில்களில் இது போன்ற மறுமணங்கள் ஏற்க மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சிலர் கூறியதாவது:
இளம்வயதில் கணவனை இழந்த பெண்கள், விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்டோர், அப்படியே வாழ வேண்டும் என்பது அவசியமல்ல. அவர்களுக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது. அவ்வாறு இருப்பவர்கள் சட்டரீதியாக மறுமணம் செய்து கொண்டு முறைப்படி கோவிலில் பதிவு திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கும் போது, ஹிந்து அறநிலையத்துறை சட்டத்தை மதிக்காமல் முட்டுக்கட்டை போடுகிறது. மறுமணத்தை ஏற்காமல் பதிவு செய்ய இயலாது என, அறநிலையத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்புகின்றனர்.
மாற்று மதத்தினர் ஹிந்து கோவில்களில் திருமணம் செய்யப்போவதில்லை. இவ்வாறு மறுக்கப்படுவது, புதிய எதிர்காலத்தை தேட முயற்சிப்பவர்களை நிராகரிக்கும் செயல். இது,மறுமணம் செய்து கொள்ள நினைப்பவர்களை மனரீதியாக பாதிக்க செய்யும்.
கோவில்களில் மறுமணம் செய்து வைக்கக் கூடாது என்று எந்தவித சட்டமும் கிடையாது. இருப்பினும், காரணமின்றி அறநிலையத்துறை நிராகரிப்பது வேதனை அளிக்கிறது. இப்பிரச்னைக்கு, அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் ரத்னவேல் பாண்டியனிடம் கேட்டதற்கு, ''பொதுவாக, மறுமணம் செய்ய நினைக்கும் இருவரும், முதல் திருமணம், வயது, ஜாதி உட்பட சான்றுகள் மற்றும் சட்டரீதியாக விவகாரத்து பெற்றதற்கான ஆவணம் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இவ்விஷயத்தில், ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி தான் செய்தாக வேண்டும். மற்றபடி, அந்தந்த கோவில் நிர்வாகங்கள்தான் இதனை முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.