/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்கணும்; மடத்துக்குளம் மக்கள் எதிர்பார்ப்பு
/
ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்கணும்; மடத்துக்குளம் மக்கள் எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்கணும்; மடத்துக்குளம் மக்கள் எதிர்பார்ப்பு
ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்கணும்; மடத்துக்குளம் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 21, 2024 09:15 PM
உடுமலை; பரிதாப நிலையிலுள்ள மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனை புதுப்பித்து, அனைத்து ரயில்களும் நின்று செல்ல, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், மதுரை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. அகல ரயில்பாதை பணிகள் துவங்கும் முன், இந்த ஸ்டேஷன், முழுமையாக இயங்கி வந்தது.
அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்று, ரயில் சேவை துவங்கிய பிறகு, இந்த ரயில்பாதையில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் மடத்துக்குளம் ஸ்டேஷனில், நிற்பதில்லை.
இதனால், அப்பகுதியை சேர்ந்த பயணியர், உடுமலை அல்லது பழநிக்கு சென்று ரயில் ஏற வேண்டியுள்ளது.
இவ்வாறு, பயன்பாடு இல்லாததால், மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் தற்போது பரிதாப நிலையில் உள்ளது. டிக்கெட் கவுன்டரை உள்ளடக்கிய கட்டடம் சிதிலமடைந்து, மேற்கூரையில், செடிகள் முளைத்து வருகிறது.
பயணியர் காத்திருக்கும், 'ப்ளாட்பார்ம்' பகுதி முழுவதும் திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு, பயணிகள் இருக்கையும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கழிப்பிடமும் நிரந்தரமாக பூட்டப்பட்டு, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ரயில்வே ஸ்டேஷன் என்பதற்கான அறிகுறியே தெரியாத அளவுக்கு அவ்விடம், படுமோசமான நிலையில் உள்ளது.
மடத்துக்குளம் புதிதாக தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டு, அரசு சார்ந்த அலுவலகங்கள், செயல்பட்டு வருகிறது. தாலுகா அலுவலகம், கோர்ட் என தாலுகாவுக்குரிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இப்பகுதியை சுற்றிலும், நுாற்பாலைகள், காகித ஆலைகள், தீவன உற்பத்தி தொழிற்சாலைகள் என 25க்கும் அதிகமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையும் இப்பகுதியிலேயே செயல்பட்டு வருகிறது. இவ்வாறு, இயற்கை மற்றும் தொழில் வளம் மிக்க பகுதியில், ரயில் சேவை கிடைக்காதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில் இயக்கப்படும் அனைத்து ரயில்களையும், மடத்துக்குளத்தில் நிறுத்த வேண்டும். மேலும், டிக்கட் கவுன்டர், முன்பதிவு மையம் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
ரயில்வே ஸ்டேஷனை புதுப்பிக்க வேண்டும் என, மதுரை ரயில்வே கோட்டத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.