/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியரசு தின கிராம சபா; 46 ஆயிரம் பேர் பங்கேற்பு
/
குடியரசு தின கிராம சபா; 46 ஆயிரம் பேர் பங்கேற்பு
குடியரசு தின கிராம சபா; 46 ஆயிரம் பேர் பங்கேற்பு
குடியரசு தின கிராம சபா; 46 ஆயிரம் பேர் பங்கேற்பு
ADDED : ஜன 27, 2026 10:19 AM
திருப்பூர்: குடியரசு தினமான நேற்று, திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி, பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலிபாளையம் பகுதி மக்கள், அடுத்தடுத்த கிராமசபா கூட்டங்களை புறக்கணித்து வருகின்றனர். நேற்றும், அந்த ஊராட்சி மக்கள், கிராமசபாவை புறக்கணித்தனர். இதனால், 264 ஊராட்சிகளில் கிராமசபா நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சி, தளிஞ்சிப்பாளையம் கிராம ஊராட்சி மைய வளாகத்தில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில், கலெக்டர் மனிஷ் நாரணவரே சிறப்பு பார்வையாளராக பங்கேற்று பேசியதாவது:
தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டு பதிவு செய்வது குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர், மொபைல் எண் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளவேண்டும். மாணவ, மாணவியர் நுாலகங்களில் அதிக நேரம் செலவிட வேண்டும்.
ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்த வேண்டும். பொதுமக்கள், ஊராட்சிகளுக்கு உரிய வரித்தொகையை உரிய காலத்தில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின், அவிநாசி அருகே கருவலுார் மாரியம்மன் கோவிலில் நடந்த சமத்துவ விருந்தில், கலெக்டர் பங்கேற்று உணவருந்தினார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, திட்ட அலுவலர் சாந்தி, ஆர்.டி.ஓ. சிவப்பிரகாஷ், ஊராட்சி உதவி இயக்குனர் சதீஷ்குமார், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் சதீஷ், தாசில்தார் சந்திரசேகர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாவட்டம் முழுவதும் 46 ஆயிரத்து 271 பேர் பங்கேற்றதில், 5,633தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

