ADDED : அக் 07, 2025 01:09 AM

திருப்பூர்;''நஞ்சராயன் பறவைகள் சரணாலயப் பகுதியில் பறவைகளுக்காக பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என்று அறிவுறுத்தப்பட்டது.
உள்நாடு மற்றும் வெளிநாடு பறவைகள் என, 190க்கும் மேற்பட்ட பறவைகளின் புகலிடமாக நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இம்முறை, இங்கு கூடுதலாக பறவைகள் வலசை வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இக்குளத்துக்கு வரும் பறவைகளின் பாதுகாப்புக்காக, தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என, திருப்பூர் இயற்கை கழகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் குளத்துப்பாளையம் பகுதியில், இயற்கை கழக தலைவர் ரவீந்திரன், உறுப்பினர்கள் சந்தோஷ், நந்தகோபால், கீதா, முருகவேல், ஈஸ்வர், ராஜ்குமார், வனத்துறை வனவர் பிரேமா மற்றும் வனக்காப்பாளர்கள் இணைந்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ரவீந்திரன் கூறுகையில், ''நஞ்சராயன் குளத்துக்கு அக்., துவங்கி பிப்., மாதம் வரை, ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகளில் இருந்து வெளிநாட்டு பறவைகள் வலசை வரும்; அதே நேரம், உள்நாட்டு பறவைகளும் அதிகளவில் இருக்கும்.
பட்டாசு சத்தம் எழும் போது, அது பறவைகளுக்கும் இடையூறாக இருக்கும். இதை குடியிருப்பு பகுதி மக்களும் புரிந்துள்ளனர்'' என்றார்.