/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆறுகள் இணைப்பு தாமதம் உடனே நிறைவேற்ற கோரிக்கை
/
ஆறுகள் இணைப்பு தாமதம் உடனே நிறைவேற்ற கோரிக்கை
ADDED : அக் 23, 2025 12:41 AM
திருப்பூர்: 'பருவமழை சமய ங்களில் பெருமளவு நீர் கடலில் கலப்பதை தடுக்க, மேட்டூர் - சரபங்கா உபரி நீர் நீரேற்று திட்டம், காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் 'க ள்' நல்லசாமி கூறினார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தின் பல இடங்களில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் பலத்த மழையால், பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்திருக்கிறது.
கீழ் பவானி அணை நிரம்பி, 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து, 35 ஆயிரம் கன அடி நீர் திறக்கவுள்ளனர். டெல்டா மாவட்டங்களிலும், மழை பெய்து வருவதால், அங்கும் சாகுபடிக்கு தண்ணீர் தேவையில்லாத நிலையே தென்படுகிறது.
உபரிநீரை, பாசனத்துக்கு திருப்பும் வகையிலான திட்டங்கள் எதுவும் இல்லாததால், வெளியேற்றப்படும் பெருமளவு உபரி நீர், வீணாக கடலில் கலக்கிறது.
அதே நேரம், திருப்பூர் மாவட்டம் காங்கயம், தாராபுரம், மூலனுார், திண்டுக்கல் மாவட்டம் பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சில இடங்களில் மழைப்பொழிவு இல்லை; வறட்சி நிலவுகிறது.
ஒட்டன்சத்திரத்தில் கண்வலிக் கிழங்கு பயிருக்கு தண்ணீர் இல்லாததால், லாரியில் நீர் வாங்கி, பாய்ச்சும் நிலை உள்ளது.
மேட்டூர் - சரபங்கா உபரி நீர் நீரேற்று திட்டத்தை நிறைவேற்றுவதன் வாயிலாக, சேலம், நாமக்கல், அரியலுார், விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
அதுபோல, காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தையும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.