
திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லுார் பகுதியில், என்.எச்., ரோட்டில் டிவைடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. காசிபாளையம் பிரிவு அமைந்துள்ள மும்முனை சந்திப்பு ரோடு, எந்நேரமும் பரபரப்பான வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி.
இப்பகுதியிலுள்ள ரோட்டின் வடபுறம் அமைந்துள்ள கால்வாய் வழியாக ரோட்டில் சேகரமாகும் மழை நீர் செல்லும். ரோட்டின் மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் தென்பகுதியில் சேகரமாகும் மழை நீர் முறையாக இந்த வடிகாலைச் சென்று சேர முடியாமல் ரோட்டின் மையத்தில் தேங்கி நிற்கிறது.
அதிகளவில் வெயில் வந்து இரண்டொரு நாளுக்குப் பின்பே இந்த இடத்தில் ஈரம் காயும் நிலை உள்ளது. அவிநாசி ரோடு, அம்மாபாளையம் பகுதியிலிருந்து அனுப்பர்பாளையம் மேல்நிலைப் பள்ளி ரோடு வழியாக, சோளிபாளையம் செல்லும் பிரதான ரோடு உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் இந்த ரோட்டைப் பயன்படுத்துகின்றனர்.இந்த ரோட்டிலும் உரிய மழைநீர் வடிகால் அமைப்பு இல்லை. ரோட்டில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

