/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'லிப்ட்' கொடுத்தவரிடம் ரூ.1.5 லட்சம் பறிப்பு
/
'லிப்ட்' கொடுத்தவரிடம் ரூ.1.5 லட்சம் பறிப்பு
ADDED : ஜூன் 19, 2025 11:50 PM
பல்லடம் : பல்லடம் அடுத்த புள்ளியப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 48. கூட்டுறவு வங்கியில்
எழுத்தராக வேலை பார்க்கிறார். ஜூன் 16 அன்று மாலை, பணி தொடர்பாக, பல்லடத்தில் இருந்து - திருப்பூருக்கு டூவீலரில் சென்றார். பல்லடம்அடுத்த, தெற்குபாளையம் பிரிவு அருகே, வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.
டூவீலரை நிறுத்திய செந்தில்குமார், வாலிபரை ஏற்றிக்கொண்டு எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அருகிலுள்ள மண் பாதையை காட்டி உள்ளே இறக்கி விடும்படி வாலிபர் கூற, செந்தில்குமாரும் அவரை அழைத்துச் சென்றுள்ளார். சிறிது துாரத்தில் வாலிபர் இறங்குவதாக கூற, மறைந்திருந்த இவரது கூட்டாளிகள் மூன்று பேரும் சேர்ந்து, செந்தில்குமாரை சரமாரியாக அடித்து தாக்கினர்.
செந்தில்குமாரை மிரட்டி அவரது 'கூகுள் பே' மூலம் ஸ்கேனிங் செய்து முதலில், 50 ஆயிரம் ரூபாய், பின் 55 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 1.5 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு அவரை விரட்டி அனுப்பினர். காயமடைந்த செந்தில்குமார், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
காயங்களுடன் இருந்த செந்தில்குமார் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவர் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார், வழிப்பறி கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர்.