/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடு முத்தரப்பு கூட்டத்தில் முடிவு
/
நார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடு முத்தரப்பு கூட்டத்தில் முடிவு
நார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடு முத்தரப்பு கூட்டத்தில் முடிவு
நார் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடு முத்தரப்பு கூட்டத்தில் முடிவு
ADDED : ஜன 06, 2026 06:29 AM
உடுமலை: தென்னை நார் தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; அதுவரை ஆலைகளை இயக்கக்கூடாது, என முத்தரப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மடத்துக்குளம் தாலுகா, மைவாடியில் ஆறு தென்னை நார் தொழிற்சாலைகளும், ஐந்து கழிவுகள் கொட்டும் மையங்களும் உள்ளன.
இந்த தொழிற்சாலைகளில், கான்கிரீட் தளம் அமைத்து, தண்ணீர் அடிக்க வேண்டும். கழிவு நீரை சேகரித்து வைக்க, பெரிய அளவிலான கான்கிரீட் தொட்டிகள் அமைத்து, சுத்திகரிக்க வேண்டும்.
கழிவுகளை உள்ளாட்சி அமைப்புகளிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகள் உள்ள நிலையில் ,எந்த விதமான பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல், தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இந்த ஆலைகளால், அருகில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர். தென்னை நார் தொழிற்சாலைகளில், திப்பிகளை, விவசாய நிலங்களில் மண்ணில் நேரடியாக பரப்பி, நீர் அடித்து துாய்மைப்பணியில் ஈடுபடுகின்றனர்.
இதனால், கழிவு நீர் நேரடியாக நிலத்திற்குள் இறங்கி, சுற்றுப்புறத்திலுள்ள விவசாய கிணறுகள், ஆழ் துளை கிணறுகளில், நிறம் மாறியும், துர்நாற்றத்துடனும் நீர் மாறியுள்ளது. இதனால், இந்த நீரை பொதுமக்களும், கால்நடைகளும் அருந்த முடியாத நிலை உள்ளது.
மேலும், தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் கழிவு நீரை முறையாக சுத்திகரிக்காமல், அருகிலுள்ள நரசிங்க பெருமாள் கோவில் நிலத்தில் நேரடியாக விடுகின்றனர்.
திறந்த வெளியில் தென்னை நார் கழிவுகள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்திய கழிவு நீரை நேரடியாக, ஓடைகளில் வெளியேற்றும் நிலையில், இந்த கழிவு நீர் அமராவதி ஆற்றில் கலந்து, குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு ஆதாரமாக உள்ள அமராவதி ஆற்றின் நீரும் மாசுபடுகிறது.
சுற்றிலும், பி.ஏ.பி., பாசனம், அமராவதி புதிய ஆயக்கட்டு மற்றும் இறவை பாசனத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தென்னை, கரும்பு, நெல், காய்கறி பயிர்கள் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலையில், மண், நிலத்தடி நீர் மாசுபடும் வகையிலும், காற்றில் கலக்கும் மஞ்சி துகள்கள் காரணாகவும், கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள் குடிநீர் ஆதாரத்தை காப்பாற்றும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், போதிய பாதுகாப்பு வழிமுறைகள் செய்யாமல் இயங்கி வரும் தென்னை நார் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, அவை இயங்க தடை விதிக்க வேண்டும், என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து, அதிகாரிகள் குழுவினர் சம்மந்தப்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள், அதிகாரிகள் மற்றும் தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் குமார் தலைமை வகித்தார்.
மடத்துக்குளம் தாசில்தார் குணசேகரன், மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர், பி.டி.ஓ,. விவசாய சங்க செயலாளர் வீரப்பன் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
இதில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதி முறை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை, தென்னை நார் தொழிற்சாலை உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும்; அதுவரை ஆலைகளை இயக்க கூடாது. மீறி இயக்கினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என முடிவு செய்யப்பட்டது.

