தீர்வை நோக்கி சம்பளப் பேச்சு: பாத்திரத் தொழிலாளர் நம்பிக்கை
தீர்வை நோக்கி சம்பளப் பேச்சு: பாத்திரத் தொழிலாளர் நம்பிக்கை
ADDED : மார் 22, 2026 07:49 PM

அனுப்பர்பாளையம்:அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் பாத்திர உற்பத்தி செய்யப்படுகிறது. இதை நம்பி ஐந்தாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.
தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
புதிய சம்பள ஒப்பம் குறித்து பேச அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் உற்பத்தியாளர் சங்கத்தை அழைத்தபோது, பித்தளை மற்றும் செம்பு உற்பத்தியாளர்கள் ஒரு ஆண்டு கழித்தும்; எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் தேர்தலுக்கு பின்பும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றனர்.
இதை ஏற்றுக்கொள்ளாத தொழிற்சங்கத்தினர் மாவட்ட தொழிலாளர் துறையில் முறையிட்டனர். அதை தொடர்ந்து, தொழிலாளர் துறை மாவட்ட உதவி கமிஷனர் பிரேமா, இரு தரப்பினரையும் அழைத்து பேசி வருகிறார்.
இதுவரை நான்கு முறை நடந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் 50 சதவீதத்தில் இருந்து இறங்கிவந்து 31 சதவீதம் சம்பள உயர்வு கேட்டுள்ளனர். அதுபோல் எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் ஐந்து சதவீதத்தில் இருந்து, 11 சதவீதம் வரை தருவதாகவும், பித்தளை மற்றும் செம்பு பாத்திர உற்பத்தியாளர் ஐந்து சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை தருவதாகவும் கூறி உள்ளனர்.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 26 ம் தேதி காலை மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடக்கிறது.
இந்த முறை நான்கு முறை பேச்சுவார்த்தையில் உரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.
''இன்னும் இரண்டு சுற்று பேச்சு வார்த்தையில் உரிய தீர்வு கிடைக்கும்'' என இரு தரப்பினரும் நம்பிக்கையில் உள்ளனர்.
.......
