ADDED : ஆக 25, 2025 10:34 PM

திருப்பூர்; தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
துாய்மை இந்தியா திட்ட பெருமாநல்லுார் சுகாதார ஊக்குவிப்பாளர் சேர்மகனி தலைமை வகித்தார். துாய்மை பணியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.
ஊரக பகுதிகளில் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடும் துாய்மை காவலர்களுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கவேண்டும். அரசு தடை செய்துள்ள, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கமாட்டோம். தள்ளுவண்டி, மூன்று சக்கர வண்டிகளில் குப்பை சேகரிக்கமாட்டோம். போதுமான பேட்டரி வண்டிகளை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்களின் உரிமையை பறிக்கும் ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில், துாய்மை பாரத இயக்க திருப்பூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், முதலிபாளையம் சுகாதார துாய்மை காவலர் மல்லிகா உள்பட துாய்மை காவலர்கள் பங்கேற்றனர்.